செவ்வாய், 29 ஜூன், 2010

உயிர்ப்பு

பனித்துளி ஒன்றுக்கு கடலின் அங்கமாக வேண்டும் என்று ஆசை பிறந்தது. எவ்வள்ளவு பெரிய கடல்! எல்லோரும் கடலைப் பார்த்து பிரமிக்கிறார்கள். நானும் அதன் அங்கமானால் எனக்கும் அந்த பெருமை கிடைக்கும். மாலையில் தோன்றி காலையில் மறையும் இந்த அற்ப வாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்தது.

தன் எண்ணத்தை செயல்படுத்த காற்றின் உதவியை நாடியது. காற்றும் உதவி செய்ய ஒப்புக் கொண்டது . மறு நாள் மாலை பனித்துளி காற்றின் மேல் அமர்ந்து கடலை நோக்கி பயணம் செய்யத்துவங்கியது. பனித்துளி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. இன்னும் சில நிமிட நேரத்தில் நான் கடலின் ஒரு அங்கமாகிவிடுவேன். பிரமாண்டத்தின் ஒரு அங்கம். எவ்வளவு பெருமையான விஷயம் இப்படியாக நினைத்துக்கொண்டு இருந்தது.

திடீரென்று, தாகம், தாகம்! தண்ணீர் என்று ஒரு குரல். குனிந்து கீழே பார்த்தது பனித்துளி. இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஒரு வாடிய செடி காம்பு, தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தது. ஒரு நொடி யோசித்த பனித்துளி, காற்றிடம், ஒரு நிமிடம்! காற்றே நில், என்றது. அடுத்த நொடி தாவி குதித்து சரியாக காம்பின் மையத்தில் போய் விழுந்து மறைந்தது.

அதிர்ச்சியுற்ற காற்று, முட்டாள் பனித்துளி இப்படி செய்துவிட்டதே! தனக்கு என்ன வேண்டும் என்று கூடத் தெரியாத இந்த முட்டாளுக்குப் போய் உதவி செய்ய நினைத்தேனே, என்று வருந்தியபடிச் சென்றது. மறுநாள் காலை அந்த வாடிய காம்பின் மேல் அழகாய் பூத்திருந்தது ஒரு பூ பனித்துளியுடன்!

2 கருத்துகள்:

Solai Kannan சொன்னது…

Brilliant Rama,

ரொம்ப நல்லா இருந்தது. பிரமாண்டத்தில் ஒரு துளியாக இருப்பதைவிட, உயிர்கொடுத்து வாழவைத்து அதில் தானும் மிளிர்வது உயர்ந்தது என்ற கருத்தை மிக அழகாக, கவிதை நயத்தோடு சொன்னது பிரமாதம்.

நன்றி
சோலைக்கண்ணன்

rama kannan சொன்னது…

thanks anna.