வியாழன், 24 மார்ச், 2011

அமெரிக்க நாட்டாமையும், அல்லக்கை 'யுஎன்'னும்


காட்சி: லிபிய மீதான போர் பற்றிய ஆலமரத்தடி ஸ்டைல் பஞ்சாயத்து கூடுகிறது. யுஎன் தலைமையில்.


பங்கேற்பாளர்கள்: தலைவர் அமெரிக்கா,பங்காளிகள் பிரிட்டன், பிரான்ஸ்.

பார்வையாளர்கள்: இந்தியா,அராப்லீக்ஸ் மற்றும் சிலர்.

***

யுஎன்: ஆங் எல்லாரும் வந்தாச்சா? அப்புறம்
அவன் வரல,எனக்கு சொல்லலன்னு பேசப்படாது.

அமெரிக்கா: எனக்கு நேரமில்ல, சட்டுபுட்னு பேசி முடிங்க.


கூட்டத்தில் ஒருவர்: ஐயா சீனா,பாக் வரலங்க.

யுஎன்: ஏன்? என்னாச்சு?


கூட்டத்தில் ஒருவர்: அது வந்து அவுங்க இரண்டுபேரும் இந்திய
எல்லைய ஒட்டி பாலம் கட்டிகிட்டு இருக்காங்க.


யுஎன்: ஏம்பா இந்தியா, இதுக்கு நீ ஒன்னும்
சொல்லலையா?


இந்தியா: வழக்கம் போல எல்லாத்துக்கும் மாதிரியேஇதுக்கும்
கவலை தெரிவிச்சுட்டேன்.


அமெரிக்கா: சபாஷ்! எனக்கு உங்கிட்ட பிடிச்சதே
இந்த அப்ரோச்தான்!

யுஎன்: சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம சுத்துபட்டு
ஊர்கள்ல உள்ள தலகட்டுக்கெல்லாம் ஐயாதான்
தலைவரு. அவரு இப்போ லிபிய
தலைவரு சரியில்லன்னு தன் பங்காளிகளோட
சேர்ந்து சண்டைய ஆரம்பிச்சுட்டாரு. அப்போ
உங்ககிட்ட கேக்க நேரமில்லை. ஆனா இப்போ
ஏதோ சரியில்லன்னு முனுமுனுப்பு வருதுன்னு
பேச்சு. அதனால உங்க எல்லாரையும் மதிச்சு
கூப்பிட்டிருக்காரு. நீங்க எல்லாரும் அவர்
பெருந்தன்மைய நெனெச்சு இதுக்கு ஆதரவளிக்கனும்.

இந்தியா & அரபு: அதெப்படிங்க சரியாகும்? அது அவுங்க
உள்ளூரு மேட்டரு, நாம தலையிடுறது சரியாப்படலைங்க.


அமெரிக்கா: அப்பு, சரி, தவறு எல்லாம் எனக்கு தெரியும்!
அந்தாளு சொந்த மக்களையே கொல்றாரு. பார்த்துகிட்டு
இருக்க முடியுமா?

கூட்டத்தில் ஒருவர்: அதனால நீங்களே கொல்றேங்கறீங்களா?

அமெரிக்கா: சண்டைன்னா அப்படித்தான். எங்களுக்கு
நல்லதுன்னா, நாலு இல்ல நாலு லட்சம் பேரக்கூட
கொல்லலாம். தப்பில்ல!
(பின்னனி இசை. டொட்ட டொட்ட டொய்)

கூட்டத்தில் ஒருவர்:ஆனா இதுக்கு முன்னாடி இதே மாதிரி
வேற இரண்டு, மூனு ஊர்ல நடந்தப்ப நீங்க
பேசாமத்தானே இருந்தீங்க. ஏன் இலங்கை
கூட கூட்டம், கூட்டமா கொன்னாரே?

அமெரிக்கா: அபத்தமா பேசாதீங்க. அவுங்க எல்லாம் ஊருக்குள்ள
எப்படி இருக்காங்கன்றத விட என்கிட்ட எப்படி
இருந்தாங்கன்றதுதான் முக்கியம். ஆனா இந்தாளு
என்னைய மதிக்கறது கிடையாது. அதனால இங்க
என்னோட தலையீடு அவசியம். அதோட
இப்போவிட்டா பின்னாடி இந்தமாதிரி சந்தர்ப்பம்
கிடைக்காது! எங்களுக்கு தலையாட்ற ஒரு ஆளை
ஏற்பாடு பண்ணிட்டு நாங்க ஒதுங்கிக்குவோம்.
இதே மாதிரி இன்னும் இரண்டு மூனு பேர் திரியிறாங்க.
அங்கேயும் சந்தர்ப்பத்த எதிர்பார்த்துக்கிட்டுதான்
இருக்கோம்! என்ன சொல்றீங்க?

இந்தியா: எங்களுக்கு விருப்பமில்ல, ஊர்ல எலக்சன் டைம் வேற.
ஏற்கனவே அடி மேல அடி வாங்கி
ஆடிப்போயிருக்கோம்.

அமெரிக்கா: என்னப்பா இந்தியா? வாய்ஸ் கூடுது! உன்னை
நல்லவன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

இந்தியா: ஐயா என் விசுவாசத்த சந்தேகப்படாதீங்க!
அணுஆயுத ஒப்பந்தத்துல இருந்து, உங்க ஊரு
காலாவதியான மருந்து,விதை, உரம்னு இறக்குமதி
செஞ்சு எங்க மக்கள அடகு வச்சி தலைமுறையா
விசுவாசத்த காப்பாத்திகிட்டு வர்றோம்.
இப்போ எங்க நிலமையையும் நீங்க நினைக்கனும்.

ரஷ்யா: (இடையில் புகுந்து) இது எங்களுக்கு புடிக்கல.
உங்களுக்கே தெரியும்! ஒரு காலத்துல உங்களுக்கு
சமமான பலத்துடன் நாட்டாமையா இருந்தவுங்க
நாங்க. எங்க நேரம் இப்படி இருக்கோம்.

அமெரிக்கா: அதுக்கு?


ரஷ்யா: இல்ல, சும்மா சொன்னேன்.


அரபு: எங்களுக்கு விருப்பமில்லைங்க.
நாங்க ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்.
இத நாங்களே பாத்துக்கிறலாம்னு நினைக்கிறோம்.

அமெரிக்கா: (அதட்டும் தொனியில்) ஏம்ப்பா அரபு,பழசெல்லாம்
மறந்துபோச்சா.இராக் ஞாபகம் இருக்குல்ல?

அரபு: அவனவன் ஊர்ல பத்து பதினைந்து பிசினஸ்
பண்றவனெல்லாம் சந்தோஷமா இருக்கான்! ஆனா ஒரே
ஒரு எண்ணைய் பிசினஸ வச்சிக்கிட்டு உங்க கிட்ட நாங்க
படுறபாடு இருக்கே கொடுமை!

அமெரிக்கா: அதுக்குதான் சொல்றேன் நான் சொல்றத கேட்டா
பாதி எண்ணையாவது கிடைக்கும். இல்லேன்னா
மொத்தமா வழிச்சுட்டு போய்டுவேன்.

பிரிட்டன்: அண்ணே! ரொம்ப கேள்வி கேக்கிறாய்ங்க.
பழைய மாதிரி ஆளுக்கு கொஞ்சமா ஊர்கள பிரிச்சு
எடுத்துகிட்டு நம்ம இஷ்டத்துக்கு நடப்போம்.

அமெரிக்கா: இருப்பா! பேசிகிட்டு இருக்கேன்ல. சபைல
இதெல்லாம் பேசக்கூடாது. இப்பவே அப்படித்தான்
நடக்குது.

கூட்டம்: இப்ப என்னதாங்க சொல்றீங்க?


யுஎன்: க்கும் (கனைத்துக் கொண்டே)
ஐயா என்ன சொல்றாருன்னா,
நீங்க எல்லாரும் இதுக்கு சம்மதிச்சு அவருக்கு
ஆதரவா கையெழுத்து போடணும்.
மத்தத ஐயாமாருங்க பாத்துக்கிடுவாங்க!

கூட்டம்: இல்லைன்னா?

அமெரிக்கா: (கோவத்துடன்) இல்லேன்னா நானே போட்டுக்கிருவேன்
உங்க கையெழுத்த. கேக்கறாம் பாரு கேணத்தனமா.

யுஎன்: தலைவரே கோபப்படாதீங்க! யாரு என்ன சொன்னாலும்
கடைசில நீங்க சொல்றதுதான். நீங்க போங்க,
நான் பார்த்துக்கிறேன்.


அமெரிக்கா: சொல்லி வை. நல்லதனமா நடந்துகிட்டா எல்லாருக்கும்
நல்லது. நான் வர்றேன்.
(துண்டை உதறி தோளில் போட்டபடி செல்கிறார்).

யுஎன்: தலைவர கோபப்படுத்தி பார்க்காதீங்க. அவர்கிட்ட
வீட்டோ பவர் இருக்குங்கிறத மறந்துடாதீங்க!

ஒருவர் (குறிக்கிட்டு):வீட்டோ பவர்ன்னா?

யுஎன்: ம், உங்கள மாதிரி வீணாப்போனவங்கள நம்பாம
அவரே அதிகாரத்த எடுத்துக்குவார்.
அவர் நினைச்சத சாதிச்சுடுவார்.


மற்றவர்: அப்புறம் எதுக்கு எங்கள கூப்பிட்டீங்க?


யுஎன்: அவர் முறையா நடந்துக்கனும்னு நினைக்கிறார்!
அதோட சண்டை முடிஞ்ச பிறகு நீங்கல்லாம் அந்த
இடத்த சுத்தம்பன்றது, அவுங்களுக்கு சாப்பாடு,
மருந்துன்னு புணர்வாழ்வுக்கு தேவையான நல்ல
விஷயங்களுக்கான செலவ உங்கள பாத்துக்க
சொல்லியிருக்காரு. அவர சர்வாதிகாரின்னு
நினைக்காதீங்க. நீங்க ஒன்னும் சும்மா செய்ய
வேண்டாம்! அதுக்கு, உங்களுக்கு நாங்க கொறஞ்ச
வட்டிக்கு கடன் கொடுக்கனும்னு ஐயா சொல்லி
இருக்காரு. அவர் மனிதாபிமானத்த புரிஞ்சுக்கங்க.


அரபு: நாங்க ஏற்கனவே தலைவர் வீட்டு செலவுல
நிறைய ஏத்துகிட்டுதான் இருக்கோம். ஊருக்கே தெரியும்.

இந்தியா: இரண்டாவது விஷயம் சொன்னீங்களே,
வாஸ்தவமான பேச்சு! ஐயாமார்கள் சாப்பிட்ட
எச்சில் இலைய எடுக்கமாட்டோம்னு
என்னைக்காவது நாங்க சொல்லியிருக்கோமா?
அது எங்க கடமை.எங்க நிலைமையை நீங்களும்
புரிஞ்சுக்கனும். ஐயாகிட்ட எடுத்து சொல்லனும்.


தூரத்திலிருந்து பார்க்கும் கியூபா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகள்:

இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம். அந்த அல்லக்கையை அவங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டா பாதி பிரச்சனை சரியாயிடும்.


யுஎன்: கூட்டம் கலையலாம். தலைவரோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு
சொல்லியனுப்புறேன்.


கூட்டம்: அப்படியே ஆகட்டுங்க!
(இடுப்பில் துண்டைக் கட்டியபடி
ஒரு விதக் கவலையுடன் கலைகிறது).

வெள்ளி, 11 மார்ச், 2011

பெண்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? சீரியல், சினிமாவோடு அவர்கள் ரசனை முடிந்தது. ஆண்களால் மட்டுமே அரசியலை தெளிவாக விமர்சிக்க முடியும். உண்மைதான், அரசியல் ஒரு விமர்சனத்திற்குரிய கருவாக மட்டுமே இருக்கும் பட்சத்தில்.

பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் வீட்டு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். விலைவாசி, கல்வி, வேலை,குடிநீர் பிரச்சனைகளுக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் ஆண்களுக்குமே சம்பந்தம் இல்லையென்றால்!

பிடிக்கும், பிடிக்காது என்று சொல்வதற்கு அரசியல் ஒரு பாடமல்ல. செய்திகளில் பார்த்தும், கேட்டும் விட்டு கட்சி, ஊழல் என்று விமர்சன பரிமாற்றத்திற்கு அது பொழுதுபோக்கும் இல்லை. நாட்டின் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு தொடங்கி கல்வி,வேலை, தனி மனித சுயமரியாதை வரை கலந்துள்ள இந்த அரசியல் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் சரிபாதியான பெண்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கை வளமாக இருக்கும் என்று நினைத்தோமேயானால், நம்மைவிட அறிவீலிகள் இருக்க முடியாது. உலகில் ஆண்,பெண் வேலைகள் என்று எதுவுமில்லை. பெண்களின் குழந்தை பேறு என்ற இயற்கையான செயலும், ஆண்களின் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புனிதமான செயலையும் தவிர்த்து.

முதல் உலகப் போரின் போது நிகழ்ந்த முக்கிய மாற்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமன்று. அதைவிட முக்கியமானது, ஐரோப்பா முழுவதும் ஆண்கள் எல்லோரும் போருக்கு சென்றுவிட, நாட்டின் நிர்வாகம் முழுமையையும் பெண்கள் ஏற்றனர். இயந்திரவியல், கப்பல் கட்டுமானம், உணவு மற்றும் உடை உற்பத்தி என்று அனைத்தையும். ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை. அப்போதே நிரூபிக்கப்பட்டு விட்டது பெண்களால் அனைத்தையும் செய்ய இயலும் என்று. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்களின் வெற்றிக்கு அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

“நான் பெண் என்பதால் என் வெற்றிக்கு அசாத்திய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் நான் தோற்றால், இவளால் முடியாது என்று கூறமாட்டார்கள். பெண்களால் முடியாது என்றே கூறுவார்கள்”.- எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான கிளாரா பூத் லூஸ் கூறியது இது.
உண்மைதான். ஒரு ஆணின் தோல்வி அவனது தனிபட்ட தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் தோல்வி ஒட்டு மொத்த பெண் குலத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலிலும் இதுவே. ஒரு ஆணின் தவறு தனிப்பட்ட தவறு. பெண்ணின் தவறு என்றால், "பொம்பளைங்க கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படித்தான்". இன்று அரசியலில் பிரபலமாக இருக்கும் சில பெண்கள், ஆண்களின் கைபாவையாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு வந்த ஆண்கள் தவறாக இருந்தால், “ஆண்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான்” என்று யாரும் சொல்வது இல்லை. பத்தில் நாலு பழுது. நூறில் தொண்ணூற்றி எட்டு பழுது. எது மோசமானது?

மேலாண்மை பாடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாக குறிப்பிடுவார்கள் மல்டி டாஸ்க்கிங் (multi tasking force). ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை திட்டமிட்டு முடிப்பது. அதற்கு அதிக திறமை வேண்டும். பெண்கள் ஆண்டுகளாக அதை தினசரி வாழ்வில் அநாயசமாக செய்பவர்கள். காலையில் சமையல் (அதுமட்டுமே ஒரு MTF) தொடங்கி மற்றவர்களின் தேவையை கவனித்து தனது வேலையும் செய்து வேலைக்கும் போவது, அதுவும் வருடம் முழுவதும் என்றால் அசாத்திய உடல் வலிமையும், மன வலிமையும் இன்றி சாத்தியமே இல்லை. ஆணோ, பெண்ணோ எந்த வெற்றிக்கும் தேவை பயிற்சியும், சிந்தனை திறனுமே! சிந்திப்பதற்கு நேரமே இல்லாமல் ஒரு வீட்டின் தினசரி அனைத்து வேலை பளுக்களையும் ஒருவர் மீது திணித்து விட்டு திறமைகளை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தனது தினசரி வேலைகளுக்கு கூட உதவி தேவைப்படுகிற ஒருவர், ஒரே ஒரு விஷயத்தில் சாதித்ததாக கூறினால் அது எந்த விதமான வெற்றி? கயிறுகளால் பிணைக்கப்பட்ட ஒருவருக்கும், சுதந்திரமான ஒருவருக்கும் ஒட்டப்பந்தயம் வைத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மடத்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும்.

விலை ஏற்றமா? வீட்டு செலவை சமன் செய்வது பெண்கள். குடிநீர் பிரச்சனை. சமாளிப்பது பெரும்பாலும் பெண்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்தால் இருப்பதை வைத்து சிறப்பாக உபசரிக்கும் சமயோசித புத்தி அவர்களுடையது. இத்தனை திறமை உள்ளவர்கள் அறிவை விசாலப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தால் சாதிக்கமாட்டார்களா? இது எல்லாவற்றையும் விட குடும்பத்தில் தன் நலனை விட மற்றவர் நலன் கருதுதலும், இயல்பான கருணை உள்ளம் கொண்டவர்களும் அதிகம் பெண்களே. எங்கு அறிவு விசாலமடைகிறதோ, அங்கு சிந்தனை மேம்படும். எங்கு சிந்தனை மேம்படுகிறதோ, அங்கு செயல் வெற்றியடையும்.

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய தினசரி வேலைகளை நீங்களே செய்யுங்கள். அது உங்களை உற்சாகமாக வைக்கும். வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அது குடும்பத்தின் சக உறுப்பினர்களிடம் உங்கள் மதிப்பை கூட்டும். குடும்பத்தின் மகிழ்ச்சி கூடும் .

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களின் தந்தை, சகோதரன், கணவர், மாமனார், மகன் என்று யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்தி வேலையை பகிர செய்யுங்கள். பேசுவதில் வல்லவர்கள் நாம். வீட்டு வேலை செய்யும் ஆண்களை மரியாதை, பாசம் என்று குழப்பிக் கொண்டு தடை செய்யாதீர்கள். உங்கள் பாசம் அவர்களை திறனுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் ஆக்க பயன்பட வேண்டுமேயன்றி, மங்குனிபாண்டியர்களாக மாற்றுவதாக இருக்க கூடாது. நமது அழகு, நம் அறிவிலும் ஆரோக்கியத்திலும் மட்டுமே உள்ளது.

நாம் அனைவருமே நமது சக மனிதர்களை மதிக்க தவறினால், நமது மதிப்பை சுலபமாக இழந்துவிடுவோம். பெண் விடுதலை என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல . அது பொருளாதார சீர்கேடு, சாதி மத பூசல், ஆதிக்க வர்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான நாட்டு மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கான அடிப்படை.