வெள்ளி, 11 மார்ச், 2011

பெண்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? சீரியல், சினிமாவோடு அவர்கள் ரசனை முடிந்தது. ஆண்களால் மட்டுமே அரசியலை தெளிவாக விமர்சிக்க முடியும். உண்மைதான், அரசியல் ஒரு விமர்சனத்திற்குரிய கருவாக மட்டுமே இருக்கும் பட்சத்தில்.

பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் வீட்டு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். விலைவாசி, கல்வி, வேலை,குடிநீர் பிரச்சனைகளுக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் ஆண்களுக்குமே சம்பந்தம் இல்லையென்றால்!

பிடிக்கும், பிடிக்காது என்று சொல்வதற்கு அரசியல் ஒரு பாடமல்ல. செய்திகளில் பார்த்தும், கேட்டும் விட்டு கட்சி, ஊழல் என்று விமர்சன பரிமாற்றத்திற்கு அது பொழுதுபோக்கும் இல்லை. நாட்டின் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு தொடங்கி கல்வி,வேலை, தனி மனித சுயமரியாதை வரை கலந்துள்ள இந்த அரசியல் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் சரிபாதியான பெண்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கை வளமாக இருக்கும் என்று நினைத்தோமேயானால், நம்மைவிட அறிவீலிகள் இருக்க முடியாது. உலகில் ஆண்,பெண் வேலைகள் என்று எதுவுமில்லை. பெண்களின் குழந்தை பேறு என்ற இயற்கையான செயலும், ஆண்களின் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புனிதமான செயலையும் தவிர்த்து.

முதல் உலகப் போரின் போது நிகழ்ந்த முக்கிய மாற்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமன்று. அதைவிட முக்கியமானது, ஐரோப்பா முழுவதும் ஆண்கள் எல்லோரும் போருக்கு சென்றுவிட, நாட்டின் நிர்வாகம் முழுமையையும் பெண்கள் ஏற்றனர். இயந்திரவியல், கப்பல் கட்டுமானம், உணவு மற்றும் உடை உற்பத்தி என்று அனைத்தையும். ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை. அப்போதே நிரூபிக்கப்பட்டு விட்டது பெண்களால் அனைத்தையும் செய்ய இயலும் என்று. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்களின் வெற்றிக்கு அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

“நான் பெண் என்பதால் என் வெற்றிக்கு அசாத்திய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் நான் தோற்றால், இவளால் முடியாது என்று கூறமாட்டார்கள். பெண்களால் முடியாது என்றே கூறுவார்கள்”.- எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான கிளாரா பூத் லூஸ் கூறியது இது.
உண்மைதான். ஒரு ஆணின் தோல்வி அவனது தனிபட்ட தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் தோல்வி ஒட்டு மொத்த பெண் குலத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலிலும் இதுவே. ஒரு ஆணின் தவறு தனிப்பட்ட தவறு. பெண்ணின் தவறு என்றால், "பொம்பளைங்க கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படித்தான்". இன்று அரசியலில் பிரபலமாக இருக்கும் சில பெண்கள், ஆண்களின் கைபாவையாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு வந்த ஆண்கள் தவறாக இருந்தால், “ஆண்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான்” என்று யாரும் சொல்வது இல்லை. பத்தில் நாலு பழுது. நூறில் தொண்ணூற்றி எட்டு பழுது. எது மோசமானது?

மேலாண்மை பாடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாக குறிப்பிடுவார்கள் மல்டி டாஸ்க்கிங் (multi tasking force). ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை திட்டமிட்டு முடிப்பது. அதற்கு அதிக திறமை வேண்டும். பெண்கள் ஆண்டுகளாக அதை தினசரி வாழ்வில் அநாயசமாக செய்பவர்கள். காலையில் சமையல் (அதுமட்டுமே ஒரு MTF) தொடங்கி மற்றவர்களின் தேவையை கவனித்து தனது வேலையும் செய்து வேலைக்கும் போவது, அதுவும் வருடம் முழுவதும் என்றால் அசாத்திய உடல் வலிமையும், மன வலிமையும் இன்றி சாத்தியமே இல்லை. ஆணோ, பெண்ணோ எந்த வெற்றிக்கும் தேவை பயிற்சியும், சிந்தனை திறனுமே! சிந்திப்பதற்கு நேரமே இல்லாமல் ஒரு வீட்டின் தினசரி அனைத்து வேலை பளுக்களையும் ஒருவர் மீது திணித்து விட்டு திறமைகளை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தனது தினசரி வேலைகளுக்கு கூட உதவி தேவைப்படுகிற ஒருவர், ஒரே ஒரு விஷயத்தில் சாதித்ததாக கூறினால் அது எந்த விதமான வெற்றி? கயிறுகளால் பிணைக்கப்பட்ட ஒருவருக்கும், சுதந்திரமான ஒருவருக்கும் ஒட்டப்பந்தயம் வைத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மடத்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும்.

விலை ஏற்றமா? வீட்டு செலவை சமன் செய்வது பெண்கள். குடிநீர் பிரச்சனை. சமாளிப்பது பெரும்பாலும் பெண்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்தால் இருப்பதை வைத்து சிறப்பாக உபசரிக்கும் சமயோசித புத்தி அவர்களுடையது. இத்தனை திறமை உள்ளவர்கள் அறிவை விசாலப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தால் சாதிக்கமாட்டார்களா? இது எல்லாவற்றையும் விட குடும்பத்தில் தன் நலனை விட மற்றவர் நலன் கருதுதலும், இயல்பான கருணை உள்ளம் கொண்டவர்களும் அதிகம் பெண்களே. எங்கு அறிவு விசாலமடைகிறதோ, அங்கு சிந்தனை மேம்படும். எங்கு சிந்தனை மேம்படுகிறதோ, அங்கு செயல் வெற்றியடையும்.

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய தினசரி வேலைகளை நீங்களே செய்யுங்கள். அது உங்களை உற்சாகமாக வைக்கும். வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அது குடும்பத்தின் சக உறுப்பினர்களிடம் உங்கள் மதிப்பை கூட்டும். குடும்பத்தின் மகிழ்ச்சி கூடும் .

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களின் தந்தை, சகோதரன், கணவர், மாமனார், மகன் என்று யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்தி வேலையை பகிர செய்யுங்கள். பேசுவதில் வல்லவர்கள் நாம். வீட்டு வேலை செய்யும் ஆண்களை மரியாதை, பாசம் என்று குழப்பிக் கொண்டு தடை செய்யாதீர்கள். உங்கள் பாசம் அவர்களை திறனுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் ஆக்க பயன்பட வேண்டுமேயன்றி, மங்குனிபாண்டியர்களாக மாற்றுவதாக இருக்க கூடாது. நமது அழகு, நம் அறிவிலும் ஆரோக்கியத்திலும் மட்டுமே உள்ளது.

நாம் அனைவருமே நமது சக மனிதர்களை மதிக்க தவறினால், நமது மதிப்பை சுலபமாக இழந்துவிடுவோம். பெண் விடுதலை என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல . அது பொருளாதார சீர்கேடு, சாதி மத பூசல், ஆதிக்க வர்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான நாட்டு மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கான அடிப்படை.

3 கருத்துகள்:

TAMILSUJATHA சொன்னது…

பெண்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? - நல்ல கட்டுரை. நிறைய யோசிக்க வைத்தது.

rama kannan சொன்னது…

Thank u sujatha. you have written lot. this is little.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
துணிச்சலான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.