வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ்செல்வன் M.A இன்ஜினியர்!

தலைப்பை பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்! சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.

இன்று ஆலமரம் போல் வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பிரபலமான நிகர்நிலைப் பல்கலைகழகம் அது. மற்றவைகளைப் போலவே கூரைக் கொட்டகையில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம்தான் நதிமூலம். அமோக வளம் கொழிக்கும் கல்வித்துறை என்பதால் விரைவிலேயே நல்ல ஏறுமுகம். அந்த நிறுவனம் தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தங்களை தொடங்கிய நேரம். அதில் ஒரு உத்தியோகஸ்தராக சேர்ந்தவர் இவர். எம்.ஏ தத்துவயியல் (அதாங்க பிலாஸஃபி) படித்தவர். அதன் அடையாளமாக முன்தலை பளபளவென்று ஷேவ் செய்தது போல் இருக்கும். பின்னால் உள்ள முடியை லாவகமாக சீவி முன்தலையில் படரவிட்டிருப்பார். அடர்ந்த கருப்புநிறம். முகத்தில் ஒன்றரை இன்ச் பவுடர் இன்றி அவரை பார்த்தவர்கள் மிக சிலரே.விரலில் அவரது இன்ஷியலைத் தாங்கிய செவ்வக மோதிரமும், கழுத்தில் செயினும், மினி பெல்பாட்டம் பேண்ட், பட்டையான கருப்பு பெல்ட், தங்க ஃப்ரேம் உள்ள கூலர் என்று கிராமம்+நகர டிபிக்கல் கலவையாக இருப்பார் . எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார். பக்கத்து வீடு என்றால் எங்கள் இருவர் வீட்டிற்கும் பொதுவான மெயின் வாசல் மற்றும் மொட்டைமாடி.


காலையில் மேக்கப் முடித்து கருப்பு என்ஃபீல்டில் தட,தடவென்று கிளம்பிவிடுவார். உத்தியோகம் சைட் இன்ஜினியர். இன்று போல் அந்நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் துறைவாரியாக பிரித்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் வசதிகள் இல்லாததால், குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த ஆட்களை (அதிலும் நிறுவனரின் சாதிக்காரர்களை) வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இவர் கல்லூரிக் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவரும் நிறுவனரின் இனத்தை சேர்ந்தவர். இவரை அலுவலகம் அனுப்பியது சூப்பரவைசராக. இவர் காட்டிக் கொண்டது இன்ஜினியராக! இவருக்கு கீழ் வேலைப்பார்த்தவர்கள் இவரை இன்ஜினியர் என்றே அழைத்தனர். கட்டுமாணப் பணிகளைப் பொறுத்தவரை இவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை ‘மேஸ்திரிய கேளுங்க. மேஸ்திரிக்கும் இவருக்கும் நல்ல புரிந்துணர்வு! தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வார்.


மேஸ்திரி வராத நாட்களில் குண்டக்க மண்டக்கவென்று ஏதாவது செய்துவிடுவார். மேஸ்திரி அதிகாலையில் வந்து வாசலில் நிற்பார். இன்னா சார், இப்பிடி பண்ணிட்டீங்க? இவர் வாய்ஸை குறைத்து என்ன? என்பார். நேத்து கொத்தனாராண்ட கப்போர்ட காமிச்சு ஜன்னல்னு சொல்லிருக்கீங்க. இல்லையே, அவன் தப்பா புரிஞ்சிருப்பான். இல்ல சார், படத்துல மேக்கால உள்ள ரூமில பீச்சாங்கைப் பக்கமுள்ள சதுக்கம் கப்போர்டு. நீங்க ஜன்னல்னு சொல்லிருக்கீங்க என்பார் தெளிவாக. சரி, சரி பார்த்து செய்ங்க. உங்களமாரி ஒரு வேலையா எனக்கு. ஆயிரம் டென்ஷன்.
எதுல வந்த?
பஸ்லதான் சார்.
இந்தா பத்து ரூபா. சைட்டுக்கு போ. நான் வரேன். அந்த சமயங்களில் நாம் கடந்தோம் என்றால், தலையை உதறிக் கொள்வார். சே! இந்தமாதிரி ஆட்களை வச்சுகிட்டு வேல வாங்கிறது இருக்கே, தலைவலி என்று நம்மிடம் அலுத்துக் கொள்வார். நாம மாடிபடிக்கு பின்னால் நின்று கவனித்ததை அறியாமல். கூடிய விரைவில் ஒரு சிவில் படித்த இளைஞனும் வேலைக்கு சேர்ந்த பிறகு மேஸ்திரியை விலக்கிவிட்டு அவனை சரிகட்டிக் கொண்டிருந்தார்.



அதுக்காக அவர் தத்துவத்திலே கரை கண்டவரோ என்று நம்பி.........ப்போய்

ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் பற்றிக் கேட்டால்,

அப்போ படித்தது மறந்திருச்சு. என்பார்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்?
சாய்ஸ்ல விட்டுட்டேன்.

கன்ஃபூசியஸ்?
நிமிர்ந்து கம்பீரமாக சொன்னார். அது சிலபஸ்லையே இல்ல.


எங்கள் வீட்டு சுவற்றில் குடும்பத்தினரின் போட்டோக்களை மாட்டும் வழக்கம் கிடையாது. ஹால் சுவரில் ஒருபுறம் ஆயில் பேஸ்டல் மகாபலிபுர ஒவியம் ஒன்றும், நுழைவாசலுக்கு எதிராக லெனின் ஒவியம் ஒன்றும் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த கண்களின் தீட்சண்யம் மாறாமல் வரையப்பட்ட அந்த ஒவியம் அழகாக இருக்கும். முதன்முதலில் வீட்டுக்குள் நுழைந்த அவர் அந்த ஒவியத்தைக் காட்டி கேட்ட கேள்வி, யாரு உங்க தாத்தாவா? நம்புங்க, லெனின் மேல சத்தியமாக அப்படித்தான் கேட்டார். யார் என்பதோடு நிறுத்தியிருந்தால் கூட ஒகே.
ஆணும், பெண்ணும் சேர்ந்து வந்தால், சிலர், யார் என்றுகூட கேட்காமல் ஹே! யாரு உங்க ஒய்ஃபா/ஹஸ்பெண்டா? என்று நாகரிகமில்லாமல் கேட்பார்களே, அதுபோல் இருந்தது. என் தந்தை டென்ஷனாகி விளக்கினார். ஆனால் அவரோ, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் சென்றுவிட்டார்.


வீட்டைப் பொறுத்தவரை அவரது உறவினர்கள் என்று யாரையும் பார்த்ததில்லை. மனைவியின் உறவினர்கள் மட்டுமே. ஒரு முறை அந்தம்மா அவர்கள் திருமணத்தை ஒரு விபத்து போலவே சித்தரித்தார். கணவரின் வகையறாக்களை, எல்லாம் நாட்டுபுறங்க. நாகரீகம் தெரியாது என்றார். ஏதோ அந்தம்மா ஆக்ஸ்போர்டில் படித்த மாதிரி. அவர் பத்தாவது கோட். கணவரின் ஊர் கிராமம். இவரது ஊர் சற்று பெரிய கிராமம். தந்தை சற்று வசதியானவர். அதைவிட அந்தம்மா முக்கியமாக குறிப்பிடுவது நிறத்தை. அவர்கள் குடும்பத்தில் எல்லொரும் வெள்ளை நிறம். அதில் மிகப் பெருமை. ஆகையால் நம்மவரும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் அவரைப் போல் இல்லாமல், மனைவி போன்று சிவந்தமேனியர்களாக இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி.


அலுவலகத்திலும் நிறுவனர் எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் முகம் மாறாமல் கேட்டுக் கொள்வார். பின்ன, வருமானம் அப்படி! குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களிலேயே இலவசமா இடம் வாங்கி கைக்காசை செலவழிக்காமல் பத்துலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் கட்டியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமாராகப் படித்த குழந்தைகளையும் அதிகம் செலவில்லாமல் பொறியியல் படிக்கவைத்து வேலையும் வாங்கினார். இப்படியாக வீட்டில், அலுவலகத்தில் காமெடியனாகவும் வெளியில் ஹீரோவாகவும் வலம் வந்து பங்களா, கார், பேங்க்பேலன்ஸ், என்று செட்டிலாகிவிட்ட இவர் சமுதாயத்தின் பார்வையில் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரே

எல்லோரும் அறிந்த விஷயம் என்றாலும், எழுத வேண்டும் என்ற உந்துதலில் எழுதியுள்ளேன்!



யார் அண்ணா ஹசாரே?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.



லோக்பால் பில்

லோக்பால் பில் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.



திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.

1.பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
2.விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
3.நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
4.சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
5.ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல், பொது நலனுக்கு ஊறு விளைவித்தல்.
“லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

கர்நாடகம்,மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,பஞ்சாப்,அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை. மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது.



ஜன் லோக்பால் பில்

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) பிரஷாந்த் பூஷன் (உச்ச நீதிமன்ற வக்கீல்) அரவிந்த் கேஜ்ரிவால் (RTI activist) அடங்கிய குழுவால் பரிந்துரைக்கபட்ட இந்த ஜன் லோக்பால் வரைவில்,

1.“லோக்பால்” மத்தியிலும், “லோக்ஆயுக்தா’ அனைத்து மாநிலங்களிலும் செயல்பட வேண்டும்.

2.அரசு மற்றும் அமைச்சர்களின் குறிக்கீடுகள் இன்றி உச்ச நீதிமன்றம் (அல்லது) தேர்தல் ஆனையம் போன்று தனித்த அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.

3.ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை, நிரூபணங்கள் எல்லாம் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புதல் வேண்டும்.

4. விசாரணையின் போது குற்றவாளியால். அரசுக்கு ஏற்படும் செலவுகளை குற்றவாளியிடமிருந்தே (குற்றம் நிரூபணம் ஆனதும்) பெறப்பட வேண்டும்.

5.பொது மக்களுக்கு: அரசு அலுவலகத்தில் பொது மனிதருக்கு செய்ய வேண்டிய பணி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படாவிடில், குறிப்பிட்ட அதிகாரிக்கு அபராதம் போடப்பட்டு, அந்த தொகை அந்த குறிப்பிட்ட மனிதருக்கு உரியதாகும்.

6.ஆகவே, பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடங்கி, ரேஷன் கார்டு உட்பட அனைத்து அரசு வேலைகள் குறித்த காலத்திற்குள் முடிக்கபடா,விடில் இங்கு புகார் செய்தால் ஒரு மாத கால அவகாசத்தில் நடவடிக்கை முடிக்கப்படும். இது தொடர்பான ஊழல் புகார்களையும் பதிவு செய்யலாம். இதுபோலவே பொதுவிஷயங்களும். இரண்டாண்டுகாலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டுவிடும்.

7.முக்கியமானது. இதன் குழு உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப் படமாட்டார்கள். இந்த அதிகாரம் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் திட்ட அதிகாரிகள் ஆகியோரை சார்ந்தது. ஆகவே அனைத்து வேலைகளும் வெளிப்படையானவை.

8.இந்த லோக்பால் குழு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டால் அந்த விசாரணையும் வெளிப்படையானது. குற்றம்சாட்டபட்டவர் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்குள் நீக்கப்பெற்று தண்டனை பெறுவார்.

9.ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ எல்லாம் இந்த லோக்பாலுடன் இணைக்கப்படும்.

10.இது சம்பந்தமான பொதுமக்களின் பாதுகாப்பு பொறுப்பை லோக்பாலே ஏற்றுக்கொள்ளும்.

கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நமக்கு நன்றாக இருந்தால், அரசுக்கு நன்றாக இருக்காது என்ற விதிப்படி அரசு இழுக்கிறது.

இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று இந்தியன் தாத்தா அப்பாயின்மென்ட் கேக்க, ஏப்ரல் 13 வரை பிஸி, பிறகு பார்க்கலாம் என்று பிரதமர் தாத்தா ஆணவத்தோடு சொல்ல உண்ணாவிரதத்தில் இறங்கிவிட்டார் அண்ணா ஹசாரே.

உஷாராக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேடையில் ஏறாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

வணங்குகிறேன் அவரை.

.