வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

புத்தருடன் ஒரு நேர்காணல்!

சமீபத்தில் ஒரு புத்தர் கோவிலுக்கு சென்ற போது தோன்றிய கேள்விகள்.

நான்: வணக்கம். நலமா ?

புத்தர் : புன்னகைத்தார்.(சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை போலும்.)

நான்: நீர் சத்தியம் தவறாதவர் என்கிறார்களே! யசோதையை
மணம்செய்யும் போது பிரியாமல் இருப்பேன் என்று சத்தியம்
செய்திருப்பீர் அல்லவா? பின் நள்ளிரவில் அவரை நீங்கிய நீர் சத்தியம் தவறியவர்தானே?

புத்தர்: புன்னகைத்தார். ( யாராகினும் எல்லா நேரங்களிலும்
சத்தியத்தைக் கடைப்பிடிப்பது சிரமம் என்கிறாரோ?)

நான்: மேலும் மனைவியின் கருத்தைக் கூடக் கேட்காததன் காரணம்?நான்
என்ற எண்ணமா? அல்லது ஆண் என்ற எண்ணமா?

புத்தர்: புன்னகை. (இரண்டும் போலும்.)

நான்: சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே! என்ற கூற்றின்படியும்
தாங்கள் கடமை தவறியவர்தானே?

புத்தர்: புன்னகை. (நான் இல்லையென்றாலும் என் மகனை அவன் தாய் சான்றோன் ஆக்கியிருப்பாள் என்கிறாரோ? போகட்டும்.)

நான் : தனக்காக மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்காகவும் போராடுகிற சாமான்யனைக் காட்டிலும் தாங்கள் மரத்தடியில் அமர்ந்துப் பெற்ற
ஞானம் எந்த வகையில் உயர்ந்தது?

புத்தர்: புன்னகை. (இது எளிது என்கிறாரோ?)

நான்: கடைசியாக ஒரு கேள்வி?
உலகில் எல்லா மதங்களும் அன்பையே வலியுறுத்துகிறது.
இருந்தபோதிலும், ஆதிகாலந்தொட்டே, இவ்வுலகில் மதச்சண்டையும்,
இனச்சண்டையும் இருந்துவருகிறபோது, புதிதாக ஒரு மதத்தை
தோற்றுவிப்பதால் , ஒரு புதிய சண்டை உருவாகக்கூடிய வாய்ப்பு
உள்ளது என்று முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய தாங்கள்
ஒரு முறையாவது சிந்தித்ததுண்டா?

புத்தர் இப்போது புன்னகைக்கவில்லை. அழுகிறாரோ? குற்றவுணர்வாக
இருக்கும்.

புத்தம் சரணம் கச்சாமி!

விடைபெற்றேன்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

வலி உணரும் தருணங்கள்





புரிதல்களற்ற வாழ்வு புறக்கணித்த
முதுமை முகமொன்று
கொடுத்த வலி தீரும் முன்
நிற்கிறது கதியற்ற சலனமற்ற
குழந்தை முகம்
ஏதுமறியா பாவனையில்
கடக்கும் காலத்தின்
பின் நடக்கும் மனதில்
அறையும் கேள்விகளின்
வலி தாங்காது
ஓடிப் புதைகிறேன்
வலியற்ற தருணங்களுள்
பின்னும் தொடர்கிறது
காலம் வன்மத்துடன்...





சனி, 3 ஜூலை, 2010

பிழைகளுடன் கூடிய
பிழையற்றக் கவிதை
ஒன்று
தீர்ந்த வார்த்தைகளும்
தீரா மனதுமாய்
வாழ்வின் பக்கங்களை
நிரப்புகிறது.

செவ்வாய், 29 ஜூன், 2010

உயிர்ப்பு

பனித்துளி ஒன்றுக்கு கடலின் அங்கமாக வேண்டும் என்று ஆசை பிறந்தது. எவ்வள்ளவு பெரிய கடல்! எல்லோரும் கடலைப் பார்த்து பிரமிக்கிறார்கள். நானும் அதன் அங்கமானால் எனக்கும் அந்த பெருமை கிடைக்கும். மாலையில் தோன்றி காலையில் மறையும் இந்த அற்ப வாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்தது.

தன் எண்ணத்தை செயல்படுத்த காற்றின் உதவியை நாடியது. காற்றும் உதவி செய்ய ஒப்புக் கொண்டது . மறு நாள் மாலை பனித்துளி காற்றின் மேல் அமர்ந்து கடலை நோக்கி பயணம் செய்யத்துவங்கியது. பனித்துளி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. இன்னும் சில நிமிட நேரத்தில் நான் கடலின் ஒரு அங்கமாகிவிடுவேன். பிரமாண்டத்தின் ஒரு அங்கம். எவ்வளவு பெருமையான விஷயம் இப்படியாக நினைத்துக்கொண்டு இருந்தது.

திடீரென்று, தாகம், தாகம்! தண்ணீர் என்று ஒரு குரல். குனிந்து கீழே பார்த்தது பனித்துளி. இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஒரு வாடிய செடி காம்பு, தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தது. ஒரு நொடி யோசித்த பனித்துளி, காற்றிடம், ஒரு நிமிடம்! காற்றே நில், என்றது. அடுத்த நொடி தாவி குதித்து சரியாக காம்பின் மையத்தில் போய் விழுந்து மறைந்தது.

அதிர்ச்சியுற்ற காற்று, முட்டாள் பனித்துளி இப்படி செய்துவிட்டதே! தனக்கு என்ன வேண்டும் என்று கூடத் தெரியாத இந்த முட்டாளுக்குப் போய் உதவி செய்ய நினைத்தேனே, என்று வருந்தியபடிச் சென்றது. மறுநாள் காலை அந்த வாடிய காம்பின் மேல் அழகாய் பூத்திருந்தது ஒரு பூ பனித்துளியுடன்!

சதுரங்கத்திலும்!


ஆட்டம் தொடங்குகிறது

அரசனை காக்க

அவரவர்க்குரிய பலத்துடன்!

ஆடுகிறாள் ராணி

அசுர பலத்துடன்

தாக்குதல்களும், தாக்குதலுக்குள்ளாதலுமாய்

அனைவரும், அரசனைத் தவிர

இறுதியில்

ஆட்டத்தின் வெற்றி அரசனுக்குரியதாகிறது

விளையாட்டிலும் கூட

உழைப்பவர்களின் வெற்றி

அவர்களுக்கானதாய் இல்லை

ஒரு போதும்.

பதிவு


நடக்கும் வழியில்

முன் கடந்த ஏதோ ஒரு

குழந்தையின் அழுத பதிவு

வெடித்துக் கிடக்கும்

சிவப்பு பலூன்!

பழைய கதை - புதிய நீதி!

ஒரு மகனும், தந்தையும் நதியோரமாக நடந்து சென்றனர். அப்போது தந்தை , மகனே! நான் உன் கையைப் பிடித்துக்கொள்கிறேன், இல்லையென்றால் நதியில் விழுந்து விடுவாய் என்று கூறினாராம். அதற்கு மகன்,வேண்டாமப்பா நான் உங்கள் கையைப் பிடித்துக்கொள்கிறேன் என்றானாம். தந்தை சிரித்தபடியே கேட்டாராம் இரண்டுக்கும் என்ன
வித்தியாசம் என்று. அதற்கு மகன், இருக்கிறதப்பா, நான் உங்கள் கையைப் பிடித்திருக்கும்போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தம் மட்டுமே இருக்கும். நீங்கள் என் கையைப் பிடித்திருக்கும் போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தத்தைவிடக் குற்ற உணர்வு அதிகமாகும் என்றானாம்.

இதிலுள்ள உள்குத்து என்னன்னா, அநாவசியமா நீங்க என் கையப்பிடிக்கத் தேவையில்லை. அவசியம்னா நாங்க பாத்துக்கறோம்.

எல்லா கதைகளிலும் நாம் நீதியை எதிர்பார்த்துப் பழகியிருப்பதால்,

நீதி 1 : குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல கைடாக இருந்தால் போதும். வார்டனாக இரு[று]க்க வேண்டியதில்லை.

நீதி 2 : அவைங்களா வளரும்போது ஏதாவது ஏழரையானா [தப்பானா] வருத்தம் மட்டுமே இருக்கும். நம்ம வளர்த்து
ஏழரையானா நமக்குக் குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ளும் என்பதே:-)

முன் மாதிரி





வாழ்க்கையை கற்றுக் கொடுக்க வந்தவள்.

சிறு துளியாய் என்னுள் வீழ்ந்து

பெருமழையாய் எனை ஆட்கொண்டவள்.

காலை கதகதப்பு, மதிய வெப்பம், இரவின் குளிர்ச்சியையும்

ஒருசேர ரசிக்க வைக்கிறாள்.

விளையாடிக் கற்றலின் இன்பத்தை அறிமுகமாக்குகிறாள்.

அபரிதமான கேள்விகளால்

எனதுத் தேடலை அதிகப்படுத்துகிறாள்.

தளரும் தருணங்களில்

தளிர் கரங்களால் தடவி அன்னையாகிறாள்.

சின்ன, சின்ன ரசனைகளை வெளிக்கொணர்கிறாள்.

ரௌத்திரம் பழகலும், குறைத்தலும்

கற்றுக் கொடுக்கிறாள்.

என் சமையலில் நறுமணத்தைக் கூட்டச் செய்கிறாள்.

அன்பின் மூலம் எதிராளியை வசப்படுத்தும்

தந்திரம் சொல்கிறாள்.

பாராட்டலின் பாங்கினை உரைக்கிறாள்.

புன்னகையின் மதிப்பை உணர்த்துகிறாள்.

நட்பும், நேசித்தலும், பகிர்தலுமே

வாழ்க்கை என்று வலியுறுத்துகிறாள்.

யார் சொன்னது?

அம்மாவே மகளின் முன் மாதிரி என்று.

என் மகளே எனது முன்மாதிரி.

முகம்





முகவரி இல்லா காட்டில் தொலைத்த

முகம் தேடி அலைகின்றேன்!

கடந்து போகின்றன பல முகங்கள்

சிவப்பே சிறந்தது! என்றது ஒரு முகம்

நீலம் உன்னதம் என்றது மற்றொன்று

வெள்ளை என்று சிரித்தது ஒன்று

புறந்தள்ளி நடக்கின்றேன்

நிறமற்ற என் முகம் தேடி.