வெள்ளி, 27 மே, 2011

சமச்சீர் கல்வி என்னும் மாயை

சமச்சீர் கல்வி கடந்த பத்து நாட்களாக எல்லோரிடமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் என் பங்கிற்கு நானும். எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற இரு நிலைப்பாடுகளையே பார்ப்பதனால் எழுதத் தோன்றியது.

முதலாவது திமுக அரசு ஆட்சிமுடியும் தருவாயில் அவசரமாக காசு பார்க்க நினைத்ததன் விளைவுதான் இந்த திட்டம்.தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும், எந்த திட்டமானாலும், அதில் காசு, கமிஷன், லஞ்சம், வேண்டியவர்களுக்கு ஆர்டர், மறைமுகப் பலன் இவையெல்லாம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.கழக கண்மணிகள் இந்த ஏப்ரல், மே மாதங்களில் அச்சகங்களை ஆரம்பித்து பின் மூடிவிடுவர். ஆசிரியர்கள் குழு அமைத்தலில் தொடங்கி புத்தகங்களை அச்சடிக்க ஆர்டர்கள் கொடுப்பதில், அச்சிட்ட புத்தகங்களை விநியோகிக்க, விற்க என எல்லா நிலையிலும் காசு பார்த்துவிடுவர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஊழல் அவர்களிடையே (அதிமுக,திமுக) பிரசித்திப் பெற்றது.அதேபோல் ஒருகழகத்தால் ஆரம்பிக்கப்படும் திட்டத்தை இன்னொரு கழகம் அப்படியே செயல்படுத்த இயலாது. பின் அடுத்த தேர்தலுக்கு எதை சொல்லி ஓட்டு கேட்பதாம்?
இதில் கலைஞர் குடும்பசரிதப் புகழ், கண்களை உறுத்தும் எழுத்துப்பிழைகள் வேறு. தவறான ஒன்றை கொடுப்பதற்கு பதில் கொடுக்காமலே இருந்து விடலாம்.
ராஜசேகர ரெட்டி தொடங்கிய விவசாயிகளின் காப்பீடு திட்டம் தான் தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுதிட்டம். ஆனால் ரா.ரெட்டி அவர் பெயரை அந்த திட்டத்திற்கு சூட்டவில்லை. கருணாநிதி எந்த திட்டத்தையும் மக்கள் நலனுக்காக மண்டையை உடைத்து கண்டுபிடிக்கவில்லை. ஓட்டுக்காக அவர் ஆரம்பிப்பார், நோட்டுக்காக குடும்பத்தினர் செயலாக்குவார்கள். கழகங்களின் ஊழல்களும் அநாகரீக அரசியலும் எழுதி முடிக்க முடியா காவியங்கள்.

நாம் விஷயத்திற்கு வருவோம்.

முதலில் மெட்ரிக்குலேஷன் எனும் படிப்பு முறையை ஒரு பாடத்திட்டமாக மாற்றிய புண்ணியவான்கள் யாரோ தெரியாது!12 வருட பள்ளி படிப்பு (அதாவது 5 வயது முதல் 16 வயது வரை) படித்தப் பின்னரே கல்லூரி படிப்புக்கு தகுதியானவர்கள் என்று அளிக்கப்படும் சான்றிதழ்தான் மெட்ரிக்குலேட். இது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். நமது நாட்டில் பத்து வருட பள்ளிபடிப்பு (6 வயது முதல் 15வரையிலான) முடிந்தவுடன், பியூசி (pre University degree) இரண்டு வருடம் படித்த பிறகே இளங்கலை படிப்புக்கு தகுதி பெறுவர். அதாவது மேற்கத்திய நாடுகளில் 12+3(4or5).
இந்தியாவில் 10+2+3(4 or 5) (இந்த 4,5 என்பது பொறியியல் &மருத்துவம்) பின்னர் பியூசி +1,+2 என்று மாற்றம் செய்யப்பட்டு பள்ளிகளிலேயே படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. உண்மையில்
மற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் பொதுவான அதாவது (நேஷனல்) தேசிய பாடத்திட்டம் என்று மட்டுமே இருக்கும். உலக அளவில் நம்முடையது இந்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ). நம்மளவில் மத்திய பாடத்திட்டம், மாநில பாடத்திட்டம் என்றுதான் உள்ளது. காரணம் மற்ற நாடுகளில் இல்லாத பண்மொழி கலாச்சாரம்.

சிபிஎஸ்இ (மத்திய கல்வி) மற்றும் எஸ்பிஇ (மாநிலக்கல்வி) இரண்டையும் கலந்த ஒரு ஜல்லியடி பாடத்திட்டம்தான் மெட்ரிக்குலேஷன் என்பது. மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டங்கள் உயர்ந்தது என்ற மாயையை உருவாக்கி காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே. தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி தரத்தின் பிரச்சனை பாடங்களில் அல்ல. படிப்பிக்கும் முறைகளில்தான். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் புவியியல் இவற்றின் பாடத்திட்டங்கள் சமமாகத்தான் இருக்கின்றன. படிக்கும் முறையிலும் எழுதும் முறையிலும்தான் வித்தியாசப்படுகின்றன. மெட்ரிக்குலேஷனைப் பொறுத்தவரையில் பாடங்களில் எழுதும் தன்மை அதிகம். ஒரு பாடம் நடத்தப்பட்டால் கேள்வி பதில்களை க்ளாஸ் வொர்க் எனப்படும் பள்ளி நோட்டில் ஒரு முறையும், வீட்டுப்பாட நோட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுத வேண்டும். அதைத் தவிர வொர்க்புக் எனும் பயிற்சி புத்தகம். ஒரு ஆங்கில இலக்கணத்திற்கு மூன்று புத்தகங்கள் வெவ்வேறு பெயர்களில். இங்கு அறிவியல் லேப்கள், கம்ப்யூட்டர் லேப்கள் இருக்கிற மாதிரி, ஆனா இருக்காது. எனக்கு தெரிந்து மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலங்கள் கிடையாது. அல்லது நூலகம் என்ற பெயரில் பள்ளிகளில் இரண்டு அலமாரிகளில் சிறுவர் புத்தங்கள் அடுக்கிவைக்கப்பட்டு, குழந்தைகள் கண்களில் படாத வண்ணம் பராமரிப்பார்கள். அரசுப் பள்ளிகளிலாவது விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நேரம் ஒதுக்குவார்கள். இந்த தனியார் பள்ளிகளில் அதுவும் கிடையாது இடமிருந்தால்தானே அதைப் பற்றி யோசிக்க? ஆனால் லைப்ரெரி,லேப் மற்றும் ஸ்போர்ட்ஸ் மெயின்டனன்ஸ் ஃபீஸ் கண்டிப்பாக உண்டு.லைப்ரெரி,லேப் ஃபீஸ் வாங்குகிறீர்களே, அவற்றை குழந்தைகள் கண்ணில் கூட காட்டமாட்டேன் என்கிறீர்களே என்று எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. ஏனெனில் நமது எண்ணமெல்லாம் அர்ஜுனன் காண்டிபக்குறியாக தொண்ணூற்றி ஐந்து சதவிகித மார்க்கை நோக்கி நிலைகொண்டு விட்டதே! அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியப் பெருந்தகைகளைக் காட்டிலும் கைடு, நோட்ஸ் என்று அழைக்கப்படும் சாதனங்களின் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருப்பார்கள். மெட்ரிக்குலேஷனில் அந்தத் தொல்லை இல்லை. ஏனெனில் பள்ளிகளே அந்த நோட்ஸ்களை வாங்கி வைத்துவிடும் ஆசிரியர்கள் அந்த நோட்ஸை போர்டில் எழுதிப் போட்டு விடுவார்கள். இரண்டிலும் மாணவர்களின் புரிதல்கள் பிரச்சனை இல்லை. அவரவர் மனப்பாடத்திறனுக்கு ஏற்றபடி தேர்வுத் தாளில் கக்க வேண்டும்.


மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ எதுவாக இருந்தாலும், நல்ல முறையில் கற்பிக்கும் பள்ளிகளில் (இவைகளின் கட்டணம் மிக அதிகம்). வீட்டுப் பாடங்கள் என்பது படிப்பதும் அது சம்பந்தமான செயல்தயாரிப்புகளும்தான். உதாரணமாக மேல்தகவல்கள் சேகரிப்பு, சார்ட் தயாரிப்பது, படங்கள் வரைவது, அடுத்தநாள் பள்ளியில் அதைப்பற்றி விவாதிப்பது என்று இருக்கும். சோதனை செய்முறைகளை செயல்வடிவில் காண்பிப்பார்கள். கம்ப்யூட்டர், லைப்ரெரி, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் செயல்படுத்துவார்கள். ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அப்டேட் செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு மருத்துவ சோதனைகளும் செய்யப்படும். இதுபோல் நடத்தும் போது செலவு அதிகம் என்பது அவர்களது வாதம்.

இது மாணவர்களை ஒப்பீட்டு பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல பள்ளியில் (நல்ல என்பது படிப்பிக்கும் முறையில்) ஸ்டேட்போர்டில் படிக்கும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவுத் திறன் மோசமாக நடத்தப்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவனின் அறிவுத்திறனை விட நன்றாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளும், மோசமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் தரத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எழுத்து பிழையின்றி எழுத (தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்) இவர்களுக்கு இயலாது.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சிறப்பாக செயல் படுத்தப்படும் பள்ளிகளும் உண்டு. மெட்ரிக்குலேஷனில் தகுதியற்ற ஆசிரியர்களால் மோசமாக நடத்தப்படும் பள்ளிகளும் உண்டு. பெரும்பாலும் நகர் புறங்களில் சில புகழ் பெற்ற நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக காசு வாங்கிக் கொண்டாலும் சிபிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு இரண்டு பாடத்திட்டங்களையும் கொண்டு தரமாகவே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பணத்தை வாங்கிக் கொண்டு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துக் கொண்டு குறைந்த முதல் அதிக லாபம் என்று நூறு சதவீதம் லாப நோக்கோடு செயல்படுகின்றன.

சராசரியாக 15லிருந்து 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுமே நல்ல கல்விக்கு அடிப்படை. இங்கு ஒராசியர் பள்ளிகள், இருஆசிரியர் பள்ளிகள், ஆசிரியர் எப்போதாவது வந்துபோகும் பள்ளிகள் என்ற குறைகளே இன்னமும் களையப்படவில்லை.

நம் ஊரில் நிலவும் சில மாயைகள்

வெ‌ளிநாடுக‌ளி‌ல் பள்ளியிலிருந்தே விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கமுடியும்.

அங்கு தேர்வுமுறைகள் கிடையாது அல்லது எளிதானது.

ரேங்க் கிடையாது கிரேடுகள் தான்.

பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக விருப்பப்பட்ட கல்லூரிக்கு சென்று விடலாம் .

நான் கூட எனது இளமை பருவத்தில் அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் பிறக்காமல் இந்த பாவப்பட்ட ஊரில் பிறக்க நேர்ந்த கதிகேட்டை நினைந்து நொந்ததுண்டு!

உண்மையில் முதலாளித்துவ பிரிட்டன் அமெரிக்கா தொடங்கி கம்யூனிச பூமியான சீனா வரை
12 வருட வகுப்பு பள்ளிப்பாடத்தில் மொழிபாடம் தொடங்கி அறிவியல், கணிதம், சமூக அறிவியல், கலை, சிட்டிசன் சிப் எனப்படும் அடிப்படை மக்கள் உரிமைப்பாடம் வரை கட்டாயம் படிக்கவேண்டும்.
தேர்வு என்பது மூன்று அல்லது இரண்டு வருடாந்திர(டெர்ம்) தேர்வுகள் உண்டு. ஆனால் வார உள் தேர்வு (இன்டர்னல்) எழுத்துதிறன், வாசிப்பு பேச்சுதிறன், பகுத்து ஆராயும் திறன் (அனலெடிக்கல்), சிறிய ப்ராஜெக்ட்டுகள் அடிப்படையாக கொண்டு இவற்றுடன் எழுத்து தேர்வும் சேர்த்து மதிப்பெண்கள் அளிக்கப்படும். 60+40(100%)

ரேங்க் வரிசை கிடையாது. ஆனால் ABCD என்று கிரேடுகள் உண்டு. இதுவும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கொடுக்கப்படும். A (90-100), B (80-89), C (70-79)இதில் சில மாறுபாடுகள் இருந்தாலும் இதுதான் அடிப்படை. ஆனால் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க்குகள் மாறும். சில நாடுகளில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க் 45/100.

நமது நாட்டில் போன்று மருத்துவம் பொறியியல் மட்டுமன்றி மற்றவகை படிப்புகளுக்கும் அந்தந்த பல்கலைகழகங்களால் நடத்தப்படும் நுழைவு தேர்வை எழுதியே குறிப்பிட்ட பாடபிரிவில் சேர இயலும்.

அனைத்து நாடுகளிலும் (சீனா உட்பட) பள்ளிகள் தனியார் வசம் உண்டு. பள்ளி தொடங்க அங்கு வங்கி கடன்களும் உண்டு. ஆனால் அனுமதி பெறுவதில் சட்டங்கள் கண்டிப்பாகவும் முறையாகவும் இருக்கும். பள்ளிகளின் நிர்வாகக்குழு என்பது நம்மூர் மாதிரி மாமன் மச்சான் சகலைபாடி சபையாக இருக்காது. ஆசிரிய பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதி, பெற்றோர்சங்க நபர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ஆட்சிமன்ற நபர் அடங்கிய குழுதான் நிர்வாகம் செய்யும். கட்டணம் அரசின் வரைமுறைக்கு உட்பட்டுதான் தீர்மானமாகும். கட்டண உயர்வும் பள்ளிகளின் விண்ணப்பத்தில் உள்ள காரணங்கள், பள்ளிகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், இவற்றின் மீதான கல்விஅமைச்சக ஆய்வு இவற்றிற்கு பிறகே முடிவு செய்யப்படும்.

வோட்டுப் பொறுக்கும் அரசியல்,
பதவி,புகழ், பொருள் இதற்காக எதையும், யாரையும் விலையாக கொடுக்க தயங்காத மக்கள்
அடுத்தவனைவிட பத்து ரூபாய் கூடுதலாக சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று வழிகாட்டும் பெற்றோர்
என்ற இந்த சுயநலமிக்க சமுதாயத்தில்

தேய்ந்த துடைப்பத்துக்கு குஞ்சம் பட்டிலிருந்தால் என்ன? சணலில் இருந்தால் என்ன?

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஔவையார்

(நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன,மேடாக இருந்தால் என்ன, எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய்!)

2 கருத்துகள்:

Vishayam சொன்னது…

Excellent writeup. Please continue writing more.

rama kannan சொன்னது…

thank u