செவ்வாய், 17 மே, 2011

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்


உலகமனைத்தையும் உங்க குடைக்குள் ஸாரி, ஒரே குடைக்குள் கொண்டுவர விரும்பும் ஐயா ஒபாமா, வணக்கமுங்க. நல்லா இருக்கீங்களா? இந்த மீடியாக்கள் வேற அநாவசியமா கேள்வி கேட்டு உங்க BPய ஏத்துறாங்கபோல. உடம்ப பாத்துக்கோங்க. உலகமே உங்கள நம்பித்தானே இருக்கு.

உங்கள பாராட்டவும் அதோட ஒரே ஒரு கோரிக்கையையும் வைக்கவும்தான் அனுப்ப இயலாத இந்த கடிதத்தை எழுதுறேன்.

ஒசாமா இறந்துட்டாரு. உங்கள அசுரன வீழ்த்துன கிருஷ்ண பரமாத்மாவா பார்க்கிறாங்க. நல்லது. ரொம்ப சந்தோஷம். எனக்கும் கொள்கைன்ற பேர்ல அப்பாவி மக்கள் கொல்லப்படுறதுல விருப்பம் இல்லைங்க. தீவிரவாத செயல்களால் கொல்லப்படுகிற பொதுமக்களை போன்றே தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கொல்லப்படுகிற பொதுமக்களின் நிலமையும் என்று நினைக்கிறவங்கள்ல நானும் ஒரு ஆள்.

பாகிஸ்தானில் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தமா புகுந்து தாக்குதல் நடத்துறது நியாயமா? உங்க நாட்டுல மத்தவங்க புகுந்து செஞ்சா ஒத்துக்குவீங்களான்னு? சத்தியமா நான் கேக்கலைங்க, சர்தாரி கேக்கிறாரு. எனக்கு புரியுது. ஐயா என்ன சொல்ல வர்றீங்கன்னா, பாக்.தீவிரவாதிகளை ஆதரிக்கிற நாடு அதனால அவங்க கிட்ட சொன்னா மேட்டர் லீக் ஆகி ஆளு எஸ்கேப்பாகிடுவார்ன்னு. அதுவும் சரிதாங்க.

அந்த காலத்துல ஆப்கானிஸ்தான்ல முஜாகைதின்களுக்கு எதிரா PPDAக்கு ஆதரவா சோவியத் தலையிட்டதால, அதை அழிக்க ஒரு ஆடு(ஒசாமா) வளத்தீங்க. வளர்த்த கிடா உங்க மார்பிலேயே பாயவும் ஆட்டை பிரியாணி போட்டுட்டீங்க. ( மக்கள் வரிப்பணத்துல ஒரு காஸ்ட்லி பிரியாணி!) நீங்க ரொம்ப படிச்சவரு. விவரமானவரு. எனக்கு அவ்வளவெல்லாம் விவரம் கிடையாது. உள்ளூரு மேட்டர விட்டுட்டு, ஊரான் வீட்டு பிரச்சனைல ஆதாயம் பாக்கலாம்னு நினைக்கிறவங்க நாட்டு பொருளாதாரத்துக்கெல்லாம் சங்குதான்னு உங்களுக்கு இன்னுமா தெரியாம இருக்குன்னு நான் கேக்க வரலங்க.

ஒசாமா இறந்த பிறகு நீங்க வேர்ல்ட் டிரேட் சென்டர்க்கு சென்று அஞ்சலி செலுத்தியதை பார்த்தபோது, பழிவாங்கிவிட்டு, அப்பா,அம்மா/நண்பன் சமாதியில் நிற்கும் எங்கள் சினிமா ஹீரோ போன்றே இருந்தது. சிலிர்த்துப் போச்சு.

ஆனால் மும்பை தாக்குதல்ல தொடர்புள்ள ‘டேவிட் ஹெட்லே’ உங்க ஊர்லதான் இருக்காரு. எங்காளுங்க கெஞ்சி கேட்டு விசாரண பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அதே போல் எங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோன போபால் அழிவு .( இரட்டை கோபுர தாக்குதல் மாதிரி இல்லை. பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு, கருவிலுள்ள குழந்தைகளையும் விடாது தொடர்கிறது) அதில் சம்பந்தப்பட்டவர் வாரன் ஆன்டர்சன். நீங்க சொல்ற மாதிரி, மற்ற செயல்களைப் போன்றே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும், அவர் பிளான்ட்ட கையால உடைக்கல. அதனால அவர ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு தெனாவட்டா பதில் சொல்றீங்களே, நியாயமா? என்று கேட்குமளவுக்கு எனக்கெல்லாம் விவரமில்லீங்க. மெத்தப் படிச்ச உங்களுக்கு தெரியாததா?“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
ஐயோவென்று போவான்னு” எங்க ஊர்ல ஒருத்தர் சொல்லியிருக்காரு.

பாருங்க, நான் சொல்ல வந்தத விட்டுட்டு என்னன்னவோ எழுதிகிட்டு இருக்கேன். என்னோட கோரிக்கை என்னன்னா

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒசாமா, ஒசாமான்னு சொல்லி ஒரு பிளாக் & ஒயிட் பாஸ்போர்ட் போட்டாவ மட்டுமே காமிக்கிறாங்க. அஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தா சொந்தக்காரனையே அடையாளம் தெரியமாட்டேங்குது. அவரு மட்டும் அப்படியே இருக்காரேன்னு ஒரு ஆச்சரியம். நேத்திக்கு நீங்க வெளியிட்ட ஒசாம போட்டாக்களிலும் முழுசா கம்பளி போர்த்திக்கிட்டு, முக்காவாசி திரும்பி முதுக காமிச்சுகிட்டு டிவி பார்க்கிறார். அது ஒசாமாவா இல்ல அவரோட சித்தப்பாவான்னு சந்தேகமா இருக்கு அதனால அவரு இறந்துபோன ஒரு போட்டவ காமிச்சுட்டீங்கன்னா உலகத்துல அதர்மம் அழிஞ்சு தர்மம் தல தூக்கிடுச்சுன்னு நாங்களும் எங்க புள்ளகுட்டிகளும் நிம்மதியா தூங்குவோம்.
செய்வீங்களா?

கருத்துகள் இல்லை: