செவ்வாய், 17 மே, 2011

தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி பலரும் பல விஷயங்களை சொல்லும் நிலையில், எனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.



தமிழ்நாடு: தமிழக முடிவுகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த முடிவுதான். இது ஜெயலலிதாவின் வெற்றி என்று சொல்ல இயலாது. ஒரு பொறுப்பான எதிர் கட்சியாக செயல்படாது தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்தித்துள்ளார். அவ்வப்போது அவர் சார்பாக சில அறிக்கைகள் வெளிவருவதுடன் சரி. வேறு சரியான மாற்றுகள் இல்லாததாலும், ஆளும் கட்சி மீதான மக்களின் அதீத வெறுப்பின் காரணமாகவுமே இந்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிர்கட்சி என்ற அந்தஸ்து பறிபோனது இதுவே முதல்முறை. உபயம்: விஜயகாந்த். நல்லவேளை பேரங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. பாமக டாக்டரின் சித்து வேலைகளுக்கு இடமில்லை. “மக்கள் எனக்கு ஒய்வளித்து உள்ளார்கள்”. சமீபத்தில் வந்த கருணாநிதியின் கருத்துக்களிலேயே இதுதான் உண்மையில் மனதின் அடியில் இருந்து வெளிப்பட்ட கருத்து என நினைக்கிறேன். கை மீறி போன குடும்ப உள்ளடிகளால் நொந்துபோன முதியவரின் ஆசுவாசம். குடும்பம் மட்டுமல்லாது நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று அடிமட்டம் வரை பரவியிருந்த எத்தெச்சதிகாரம், நிர்வாக சீர்கேடு, ஊழல் என்று சகிக்கமுடியாத அளவிற்கு போய்விட்டது. அரசின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. சரி செய்ய அவகாசம் வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கூற்று மறுக்க முடியாத ஒன்று. ஆனால் மக்கள், ஊடகங்கள், சொந்தக் கட்சிகாரர்கள் மட்டுமன்றி அமைச்சர்களும், அதிகாரிகளும்கூட நினைத்தவுடன் சந்திக்க இயலாத நிலையும் உடன் பிறவா சகோதரியின் பாசமும் தொடர்ந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

புதுவை: செல்வாக்கும், மக்கள் எளிதில் சந்திக்க கூடியவருமான ரெங்கசாமியை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் தனக்குதானே வைத்துக் கொண்ட ஆப்பு. ஆனால் காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் ஐக்கியமாகி விடுவதை பார்த்திருக்கிறோம்.



கேரளா: LDF ஐந்து வருடம் UDF ஐந்து வருடம் என்பதுதான் கேரளாவின் பதிவு(வழக்கம்) . ஆனால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கம்யூனிஸ்ட்டுகள் சமபலத்துடன் இருப்பது. வெறும் நான்கு ஸீட்களே வித்தியாசம். காரணம் அச்சுதானந்தன். சொந்தக்கட்சி என்று மட்டுமில்லாமல் எதிர்கட்சியிலும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்போதும் முதலமைச்சர் ஆவதற்கு தள்ளுமுள்ளுகள் நடைபெறும். முதலமைச்சர் வேட்பாளராக உம்மன்சாண்டி அறிவிக்கப்பட்டாலும், இந்த முறை வித்தியாசமாக நான் வரலை, நீ வரலை என்பதாக இருக்கிறதாம். ஏனெனில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்பதால்.



மேற்குவங்கம்: அதிர்ச்சி என்று ஊடகங்கள் வருணித்தாலும், கடந்த சில வருடங்களாகவே உள்ளாட்சி தேர்தல் தொடங்கி இடைத்தேர்தல் வரை சீட்டை மம்தாவிடம் பறிகொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் தோழர்கள்! காரணம் மம்தா தீதியின் அதிரடி அரசியல் மட்டுமல்ல.


1977ல் ஜோதிபாசு தலமையில் மார்க்ஸிஸ்ட் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு எந்த மாநிலமும் செய்யாத நிலசீர்திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் ஏழை விவாசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது. விவசாயம் முக்கிய தொழில். நிலங்கள் சிறிய அளவில் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி தனிமனித தேவைகளை நிறைவு செய்தாலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி பெருகவில்லை. 1948தொடங்கி 1962 வரையிலான சித்தரஞ்சன் தானியங்கி இன்ஜின் தொழிற்சாலை துர்காபூர் எஃகு தொழிற்சாலை தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகியவை தவிர்த்து ஒரு IT கம்பனியும், ஒரு பெட்ரோகெமிக்கல் கம்பெனி மட்டுமே இந்த 34 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவை.


மாநிலத்தின் செலவு அனைத்தும் அரசினுடையது. ஆனால் அதற்கேற்ற வருமானமில்லை. பொருளாதார ரீதியாக மத்திய அரசை சார்ந்து இருக்கவேண்டிய நிலை மற்றும் அண்டை நாட்டு அகதிகளின் வரவு என்ற பிரச்சனை வேறு.

அரசாங்கத்தை நிர்வகிக்க தொழில் வளர்ச்சி அவசியம் என்று கணக்கிட்டு சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தபோது அரசாங்கத்திடம் துண்டு நிலம்கூட இல்லை. அதையெல்லாம்தான் கொடுத்தாயிற்றே. ஆனால் நிலங்களை திரும்ப எடுப்பதில் சிக்கல். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் அரசு சரியான திட்டமும், வழியும் ஏற்படுத்தாமல் அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை.

மற்றபடி இந்த 34 ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றசாட்டு கிடையாது. இந்தியாவின் எந்த பகுதியில் மத கலவரம் ஏற்பட்டாலும் மிகவும் சென்சிடிவான (அருகில் பங்களாதேஷ்) இந்த பகுதியில் ஒரு கலவரமும் ஏற்பட்டது கிடையாது. மேல்மட்டத்திலும் அதற்கு அடுத்த அளவிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் நேர்மையானவர்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர்கள். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், பஞ்சாயத்து நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் இங்குள்ள வங்காளிகளின் கருத்து.

இதுவரை மம்தா பாணர்ஜி எந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி வென்றாரோ, அதே பிரச்சனைகளை அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இரயில்வே நிர்வாகத்தை சரியாக நடத்த இயலாதவர் ஒரு மாநிலத்தை எங்கனம் நிர்வகிப்பார் என்பதை அம்மாநில மக்களே உணர்ந்து சொல்லட்டும்.

கருத்துகள் இல்லை: