ஞாயிறு, 10 ஜூன், 2012

SPL -II

மறுநாள் காலை சுந்தர், வெற்றியுடன் முதலாவதாக சென்றுவிட்டான். மற்றவர்கள் ரமேஷ் வீட்டு வாசலில் சேர ஆரம்பித்தனர். முருகேசன் தம்பியுடன் வந்து சேர்ந்தான். 'மொட்ட' ரவி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இருவரை கூட்டி வந்தான். பாஸ்கர் ஒரு நண்பனையும் செந்தில் ஒருத்தனையும் கூட்டிக் கொண்டு வர சீனு டென்ஷனான். எதுக்குடா இத்தனைபேர் என்று கேட்க, அதனால என்னடா? பார்வையாளர்கள், உதவிக்கு ஆட்கள் என்று பதிலளித்தான் 'மொட்ட'ரவி. நம்ம விளையாடும் போது தண்ணி கிண்ணி எடுத்து கொடுக்க, ஸ்கோர் போர்டு பக்கத்துல என்று நம் ஆட்கள் இருக்கிறது சேஃப்தானே? இதுவும் சரி என்று பட்டது. பார்த்தா வரவில்லை. இந்த பரதேசி பார்த்தா என்ன பன்றான்? என்று கொந்தளித்தனர். ரமேஷும் பாலாஜியும் பார்த்தா வீட்டிற்கு சென்றனர். அங்கு நிலமை சரியில்லாமல் இருந்தது. ஸாரிடா! பாட்டி தவறிட்டா. காலம்பற நியூஸ் வந்தது. ஊருக்கு கிளம்பிண்டு இருக்கோம். யாரண்டையாவது சொல்லி அனுப்பலாம்ன்னு வெய்ட் பண்ணின்டு இருந்தேன். நீங்களே வந்துட்டேள் என்றான் பரிதாபமாக. ஸாரிடா! சரி போய்ட்டு வா என்றனர் டீமின் முக்கிய ஆல்ரவுண்டர் ஒருவனை தவறவிட்ட வருத்ததுடன். நல்லா விளையாடுங்கோ. ஆல் த பெஸ்ட் என்று வழியனுப்பி வைத்தான் பார்த்த சாரதி. இவர்களுக்கு முன்னதாக சென்ற சுந்தரும் வெற்றியும் மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தனர். நான்கைந்து யமஹா மற்றும் ராஜ்தூத்களில் கணிசமான கும்பல் வந்து இறங்கியது. பற்றாக்குறைக்கு ஒரு ஆட்டோ வேறு! குழப்பமாக பார்த்த சுந்தர் வெற்றியிடம், இவுங்களாடா? என்றான் சந்தேகமாக. அப்படித்தான் நினைக்கிறேன்! என்றான் வெற்றி. என்னது நினைக்கிறியா? அப்போ உனக்கு யாரையும் தெரியாதா? என்றான் கலவரமாக. அது வந்து, நீ என்ன சொன்னியோ அதை அப்படியே என் கசின் கிட்ட சொன்னேன். அவன் சொன்னதை அப்படியே உன்கிட்ட சொன்னேன். என்றான் வெற்றி கூலாக. ஆக்ச்சுவலி என்று தொடங்கிய வெற்றியை இடைமறித்து, பொத்து. மவனே உன்ன அப்புறம் வச்சுக்கிறேன் என்றபடி அவர்களை நெருங்கினான். ஹலோ! ஐயாம் சுந்தர். டீம் வந்துகிட்டு இருக்காங்க. சோ, மத்ததெல்லாம் சொன்ன மாதிரி தானே என்று உறுதிபடுத்திக் கொண்டான் என்ன பேசினார்கள் என்பது தெரியாமலே! அவர்களும் ஆமோதித்தனர். தொடர்ந்து வந்த சீனுவும் மற்றவர்களும் இந்த கும்பலைப் பார்த்து ஜெர்க் ஆகினர். என்னடா இவனுங்க “சூப்பர் சுப்பராயனோட” அசிஸ்டென்டுகள் மாதிரி இருக்கானுங்க என்று மிரட்சியுடன் கேட்டனர். சுந்தர், அதெல்லாம் ஒன்னுமில்லடா. நம்ம பாட்டுக்கு விளையாடுவோம் என்றான் கலவரத்தை மறைத்தவாறு. அனைவரும் ஒரே மாதிரியாக கருப்பு பேண்ட், கருப்பு ரவுண்ட் நெக் டி ஷர்ட். அதில் சிவப்பாக பூராண் மாதிரியான டிசைன் வேறு! தொப்பி. ஷூக்கள் என்று ஆஜானுபாகுவாக ஏதோ விஜயகாந்த் சண்டைப்பட ஷுட்டிங்கிற்கு வந்தது போல் தோற்றமளித்தனர். ‘மொட்ட’ ரவி அவர்களிடம் எதுக்கு இத்தனை பேர்? யாரெல்லாம் விளையாட போகிறார்கள்? என்று விவரம் கேட்டான். கேப்டன் என்று சொல்லப்பட்ட ஜெயமணி, பதினோரு பேர் விளையாடுவோம். மூன்று அம்பையர். ஸ்கோர் எழுத நாலு பேர். ஃபிசியோதெரபிஸ்ட் என்று அடுக்கினான். பாலாஜி, என்னது ஃபிசியோதெரபிஸ்ட்டா? என்று கேட்டான். ஆமா, அங்கே பெரிய பேக் வைத்துக் கொண்டு நிற்கிறானே அவன்தான். ஏதாவது அடிபட்டா ஹெல்ப் பண்ணுவான். அந்த பேக்ல பாண்ட்-எய்ட், டெட்டால், மருந்து எல்லாம் இருக்கு. உங்களுக்கு அடிபட்டா நீங்க கூட யூஸ் பண்ணிக்கலாம் தம்பி என்றான் பெருந்தன்மையாக! பாலாஜிக்கு கண்ணைக் கட்டியது. வில்லன் பொன்னம்பலத்தின் அண்ணன் போன்று இருந்த ஒருவர் வந்து என்ன மேட்ச் தொடங்கலாமா? என்று கேட்க, சீனு அவரை கேள்விக்குறியுடன் நோக்கினான். மணி, சீனுவை நோக்கி அவர் தண்டபாணி. எங்க மேனேஜர். ஃபைனான்சியரும் கூட என்றான். நல்லது தொடங்கலாம்ண்ணே என்றான் சீனு. தண்டபாணி, தம்பி மொதல்ல பணத்த என்கிட்ட கொடுத்துடுங்க மேட்ச் முடிந்ததும் செட்டில் பண்ணிக்கிருவோம் என்றார். மேட்ச் முடியட்டும்ண்ணே என்றான் ரவி. எப்பவுமே இதான் வழக்கம் என்றார். பணம் பாக்கெட் மாறியதும், டாஸ் யார் போடுவது என்று பேச்சு வந்தது. அதெல்லாம் ஒன்னியும் வேண்டாம். நீங்களே பேட் பண்ணுங்க என்றார் தண்டபாணி. முதல் ஓவரை ஒருவன் வீச ஒரு பந்தைக் கூட தொடமுடியவில்லை. அடுத்தடுத்த ஓவர்களிலும் திக்கி திணறினர். காரணம் அவர்கள் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதால் அல்ல. முட்டியிலிருந்து, முகவாய்கட்டை வரை எது சிக்கினாலும் பெயர்த்துவிடுவது என்ற அவர்களது அணுகுமுறையால். அவர்களது அம்பயர்களோ ‘வைட்’ ‘நோ பால்’ என்ற பதங்களை அறியாதவர்களோ? என்று சந்தேகம் வரும்படியாகவே நின்று கொண்டிருந்தனர். இதைக் கண்ட மொட்டரவி ஜெயமணியை அழைத்து அவர்கள் தரப்பில் ஒருவரும் தங்கள் தரப்பிலிருந்து ஒருவரும் அம்பையராக இருக்கவேண்டும் என்று கூறினான். ஒன்னியும் பிரச்சினையில்ல இருக்கட்டும் என்றான். மொட்டரவியின் நண்பனை அழைத்து அம்பையராக்கியதில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. தாக்குவது போல் பௌலிங் போடக்கூடாது என்றபோது, தோடா! கொயந்த புள்ளைங்க மாரி அழுவுறானுங்கோ என்று கிண்டலடித்தனர். அருள் சுந்தர் குமார் மூவரும் வேகத்துடன் சுழற்றி ஒரு வழியாக முடிவில் அறுபத்திஐந்து ரன்களை தேத்தியிருந்தனர். பேட்டிங் முடிந்ததும் ஸ்கோர் போர்டுக்கு அருகில் கண்காணித்துக் கொண்டு இருந்த மொட்ட ரவியின் நண்பனும், முருகேசனின் தம்பியும் வியர்த்து விறுவிறுத்து வந்தனர். அவங்க வைச்சிருக்கிறது வெறும் மருந்து மட்டுமில்ல என்றனர். பின்ன? என்றான் சீனு. அவனுங்க பேக்கை போய் பாருங்க! என்று மட்டும் சொன்னர். இருக்கிற இம்சை போதாதுன்னு இவனுங்க வேற என்று அலுத்துக் கொண்ட முருகேசன், சுந்தர் அவர்கள் அருகில் சென்று நோட்டமிட்டனர். மற்றவர்கள் முறைத்துக் கொண்டிருக்க, வாங்க,வாங்க முறுக்கு, சிப்ஸ் ஏதாவது சாப்பிடுங்க தம்பிகளா என்று உபசரித்தார் தண்டபாணி. அங்கு ஸ்நாக்ஸ், சோடாவிலிருந்து க்வார்ட்டர் பாட்டில்கள் வரை மினி “ஸ்நாக்- “பாரை” கண்டதும் வெலவெலத்து போயினர் இருவரும். ஆனால் அவரோ அலட்டிக் கொள்ளாமல் தம்பிகளா! சில்லறை இல்ல உங்க பசங்க யாரையாவது அனுப்பி சோடாவும், சிகரெட்டும் வாங்கிட்டு வர சொல்லுங்க. கடைசில கணக்கு பார்த்துக்கல்லாம் என்றார். என்ன சார் இது விளையாடிக்கிட்டு இருக்கும் போது இதெல்லாம் என்றான் முருகேசன் அடிக்குரலில். குழுவிலிருந்த ஒருவன், அண்ணனையே எதிர்த்து பேசுறீயா? தட்டினேன்னா தாராந்துடுவ என்று எகிறினான். ஜெயமணி குறுக்கிட்டு, சின்னபசங்க கிட்ட போய் எகிறிக்கிட்டு என்று அதட்டினான். சரிப்பா மேட்ச்க்கு டைமாச்சு சீக்கிரம் போய் வாங்கிட்டு வாங்க என்றான். இவர்களிடம் பேசிப் பலனில்லை என்று நகர்ந்தனர். இதைக் கேட்ட அனைவரும் மிரண்டனர். முருகேசனின் தம்பியிடம் காசைக் கொடுத்து அனுப்பினர். ஏண்டா பேசாம இப்படியே போய்ருவோமா என்றான் வெற்றி பயத்துடன். இப்ப வேற காசக் கொடுத்திருக்கோம், விளையாடி பார்த்துவிடுவோம் என்றனர் மற்றவர்கள். இதற்கிடையே அந்த க்ரூப்பில் இருவர் எல்லைக் கோட்டிற்காக (பவுண்டரி) போட்டிருந்த சுண்ணாம்பு பவுடர் மேல் சிரத்தையாக வேறு ஒரு கோடு வரைந்து கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களில் ஒருவன் பழைய கோட்டை அழித்த வண்ணம் வர, மற்றவன் அரை அடி முன் தள்ளி பவுடரைத் தூவி எல்லைக்கோட்டை குறுக்கி கொண்டிருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை. வேறு வழியின்றி ஆட்டத்தைத் தொடங்கினர். முதலாவது ஓவரை தொடங்கினான் பாஸ்கர். பாஸ்கர், ரவி, சுந்தர் என்று மாறி, மாறி, நாக்கு வெளி தள்ள பந்துகளை வீசினர். ஏற்கனவே இருந்த போட்டி டென்ஷனுடன் இப்போது புதிதாக பயமும் சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட அனைவரின் பௌலிங்கும் “இருபத்திமூன்றாம் புலிகேசி”யின் அம்பைப் போல் இலக்கின்றி பாய்ந்து கொண்டிருந்தது! பந்து பேட்ஸ்மேன்னை தவிர்த்து அனைவரையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. கோபமான சீனு, அனைவரையும் அழைத்து என்னங்கடா ஆச்சு? என்று எகிறினான். எல்லோருமே, என்னன்னு தெரியலை. கன்ட்ரோலே இல்லை என்று ஒரே மாதிரியாக பதிலல்லாத பதிலை கூறினர். எனக்கு இந்த ஷூ செட்டாகவில்லை. இதை கழற்றி விட்டு ஓடினால் கண்ட்ரோலுடன் பந்து வீச முடியும் என்றான் பாஸ்கர். எதையாவது பண்ணித் தொலை! என்றான் சீனு. ஷூக்களை கழற்றி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அடுத்த ஓவரை வீசினான். இந்த முறை அவனது ஓவரில், பந்துக்களின் எண்ணிக்கை பண்னிரெண்டு! வெறுத்துபோன சீனு, வேடிக்கை பார்க்க வந்த முருகேசனின் தம்பியை விளித்து பந்து வீச பணித்தான். இந்த வியூகம் வீண் போகவில்லை! டென்ஷன் இல்லாததாலும், “திண்ணைல உட்கார்ந்து இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்ததாம் கல்யாணம்” என்கிற எதிர்பாரா சந்தோஷத்தாலும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி டீமின் ஸ்டார் பௌலர் ஆனான். ஆயினும் சூடு கண்ட ஆட்டோ மீட்டரைப்போல் அங்கு ஸ்கோர்போர்டில் ரன்கள் ஏறி இருந்ததால், அவர்கள் டீம் வெற்றிபெற்றதாக அவர்களே அறிவித்து மகிழ்ந்து கொண்டாடினர். இதற்கிடையில், எதிரணியில் ஒருவன், விளையாட்டை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பாஸ்கரின் இரவல் ஷூவில் கூரிய கருங்கல்லை வைத்து குத்திக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட பாஸ்கருக்கு மயக்கமே வந்து விட்டது. ஓடிச் சென்று ஷூவைப் பறித்தான். அந்தக் கல்லைக் கொண்டு அவன் நெஞ்சில் குத்தியிருந்தாலும் வலித்திருக்காது. மனுஷனாடா நீ? ஷூல கல்ல வச்சு குத்தி பேத்து வச்சிருக்க என்று அவனுடன் சண்டையிட்டான். அவனும் வேண்டுமென்று செய்யாத காரணத்தால் செய்த செயலின் வீரியத்தை அறியவில்லை. சப்ப மேட்டருக்கு போய் ஏதோ உன் ஷூவை திருடிக்கிட்ட மாதிரி பேசிக்கிட்டு இருக்க. ஷூ போடறதுக்கு கால் இருக்காது என்று கத்தினான். சீனு, ‘மொட்ட’ரவி, அவனது நண்பர்கள் அனைவரும் சண்டையை விலக்கி சமாதனம் செய்து கொண்டிருந்தனர். மற்ற எல்லாவற்றையும் மறந்து, அருணை எப்படி எதிர்கொள்வது? என்ற கவலையில் ஒரு ஓரமாக ஷூவை மார்போடு அணைத்தபடி அமர்ந்து விட்டான். அனைவரும் பாஸ்கரை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பைக்குகளும், ஆட்டோவும் கிளம்பும் சத்தம் கேட்டது. சீனு, சுந்தர், ரவி மூவரும் அவர்களை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினர். அவர்கள் வண்டியிலிருந்தபடியே ‘தேங்க்ஸ்’ பாய்ஸ்! பை, பை! என்றபடி பறந்தனர். விளையாடிய வலியும், பணத்தை பறி கொடுத்த ஏமாற்றமும் சேர்ந்து, கண்ணீருடன் யாரும் எவருடனும் பேசாமல் வீட்டை நோக்கி சென்றனர். மறுநாள் வழக்கம் போல் மீட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாலை நேரமானதால் இளம் பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை கடந்து சென்ற தெருவாசிகள் சிலர், ஏம்ப்பா! நேத்து ஏதோ கிரிகெட் போட்டிக்கு போனிங்களாமே என்னாச்சு? என்று வினவினர். அதுவா அங்கிள்! ஜெயிச்சிட்டோம்! ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சோம். பட் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்! என்றபடி அரட்டையை தொடர்ந்தனர். பின் குறிப்பு: மேற்கண்ட ‘SPL’லை ‘சொதப்பல்’ / ’சூப்’ ப்ரிமீயர் லீக்! என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். .

கருத்துகள் இல்லை: