ஞாயிறு, 3 ஜூன், 2012

SPL -I

நண்பர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வணக்கம்! நம்மை ஆள்பவர்கள், ஆள துடிப்பவர்கள், அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ மக்களை ஒருவித அழுத்தத்திற்கும், அதன் காரணமாக ஒரு புரட்சி மனோபாவத்திற்கும் இட்டு செல்லும் நிலையிலும், மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன் மரம் உதிர்க்கும் சருகைப்போல அல்லவை களைந்து நல்லவை ஆற்றும் அனைவருக்கும் வணக்கம். நண்பர்களுக்கு நடந்த அத்தனை நல்ல விஷயங்களுக்கும் மகிழ்ச்சியான தருணங்களுக்கும் வாழ்த்துக்கள்! குழந்தைகள் ஸ்கூல், வேலை இதற்கிடையே உடல் உபாதைகளுக்காக பயிற்சி செய்ய தொடங்கியதில் கழுத்துவலி போய் திருகு வலி வந்ததால் விழுந்த இடைவெளி. இத்துடன் ஐபில் வேறு! இந்த ஐபில்ஐ பார்க்கும் போது, இதில் எவையெல்லாம் முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட ஆட்டங்கள் என்று புள்ளிவிவரங்களை வைத்து தனியாக ஒரு கேம் ஆடிக் கொண்டு இருந்தனர் குடும்பத்தினர். இதன் காரணமாக எழுந்த மலரும் நினைவு கீழே!“ஐபில்”, “சென்னை-28”க்கும் முன்பே நடந்த கதை இது! சென்னை முழுதும் ஆங்காங்கே க்ரிகெட் ஜுரத்தில் டீம்கள் உருவாகி, விடுமுறை நாட்களில் அடிக்கிற வெயில் வீணாகாமல் சிரமேற்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த காலகட்டம். எங்க ஏரியாவிலும் ஒரு டீம் தீவிரமாக நாங்களும் விளையாடுவோம் என்கிற டைப்பில் திரிந்து கொண்டு இருந்தது. உத்தேசமாக பதிமூன்றுபேர். இதில் வீடு மாறி போகிறவர்கள், புதிதாக குடி வருகிறவர்கள் என்று “அவருக்கு பதில் இவர்” என்கிற மெகா சீரியல் மாற்றங்கள் இருக்கும். தெருவில் தொடங்கி அருகில் இருக்கும் ஆவின் பூத்தை ஒட்டிய க்ரவுண்ட் வரை நேரம் கிடைக்கும் போது எல்லாம் க்ரிகெட்தான். அருள், சுந்தர், பாஸ்கர், ரமேஷ், பார்த்தசாரதி இந்த ஐவரும்தான் டீமின் முக்கிய ஆல்ரவுண்டர்கள் மற்றும் மேனஜ்மென்ட் கமிட்டியும் கூட! பாஸ்கர், ரவி, சீனு முதன்மை பந்துவீச்சாளர்கள். இதுபோக அருள் மற்றும் பாலாஜி கம்பெனி ஸ்பான்ஸர்ஸ். இருவரும் வசதியான வீட்டு பையன்கள். எங்கள் தெருமுடிவில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் மேடையில் எப்போதும் கூடி கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த டீம். ஒரு மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மூச்சிரைக்க வந்த சுந்தர் விஷயம் தெரியுமாடா? ராயபுரத்தில ஒரு டீம் நூறு வச்சா இருநூறுன்னு பெட் கட்டி விளையாடுறானுங்களாம். போவமா? என்றான். டேய்! வழக்கம் போல குழப்ப ஆரம்பிச்சுட்டான் என்றான் சீனு. இல்ல மச்சி, அங்க ஒரு டீம் ரெகுலரா க்ரிகெட் விளையாடுதாம். அந்த டீமோட யார் வேணாலும் மோதலாம். பந்தயப் பணத்தை நம்ம தகுதிக்கேத்த மாதிரி நூறோ, இருநூறோ ஏன் ஆயிரம் கூட வச்சிக்கெல்லாம். தீர்மானம் நம்மளோடது. நம்ம தோத்தா நம்ம சொன்ன அமவுண்ட்ட கொடுத்திடனும். ஆனா நாம ஜெயிச்சோம்ன்னா அவனுங்க டபுள் த அமவுண்ட் அதாவது நூறு கட்டியிருந்தா இருநூறா கொடுத்துடுவாங்களாம் என்று விவரித்தான் சுந்தர். உனக்கு யார்டா சொன்னா? என் க்ளாஸ்மேட்ரா. அங்கயிருக்கிற அவனோட கசின் சொன்னதா சொன்னான். சூப்பரா இருக்கே என்றனர் அனைவரும். இதுல ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு வேண்டாம் என்றான் பார்த்தா என்ற பார்த்தசாரதி. சரியான சடடா இவன்! எதுக்கெடுத்தாலும் சந்தேகம் என்று கடுப்பானான் சுந்தர். விளையாட போறோம், தோத்தா நாம சொல்றத கொடுக்க போகிறோம். ஜெயிச்சா டபுளா கிடைக்கும் ரொம்ப சிம்பிள். எல்லோருக்கும் மோதி பார்த்தாலென்ன என்றே தோன்றியது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து இருவாரங்களுக்கு கடுமையாக ப்ராக்டீஸ் செய்வது. பந்தய பணத்தை திரட்டுவது. சுந்தர் க்ளாஸ்மேட் உதவியுடன் அந்த டீமை சந்திப்பது. அதற்கடுத்து வரும் ஞாயிற்றுகிழமையில் போட்டியிடுவது. டீம் மெம்பர்கள் அனைவரும் அவரவர்க்குரிய உபகரணங்களை அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. இத்தனை நாள் பொழுதுபோக்காக இருந்த ஒரு விஷயம் இன்றிலிருந்து ஒரு முக்கிய குறிக்கோளாக ஆன பெருமிதத்துடன் சென்றனர். பாஸ்கர், ரவி இருவரும் ஒரே காம்பவுண்டில் குடியிருந்தனர். அருளும் பாலாஜியும் ஒரே தெருவில் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள். மற்றபடி ப்ளஸ்டூ முடித்துவிட்டு அப்பாவின் கடையிலேயே வேலை பார்த்து கொண்டிருந்த குமார். அரியர்ஸுடன் அலைந்து கொண்டிருந்த முருகேசன். அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த செந்தில் இவர்களுடன் சொற்ப சம்பளத்தில் வேலைபார்த்து வந்த முப்பத்திஐந்து வயதாகியும் திருமணமாகாத மொட்ட ரவியும் அடக்கம். டீமில் இரண்டு ரவிகள் இருந்ததால் இந்த அடைமொழி! காரணம் இஞ்ச் அளவு தாண்டி முடியை வளர விடமாட்டான். இவர்களின் பொருளாதார நிலைகள் வேறு வேறாக இருந்தாலும் இந்த நண்பர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருந்தது. அருள், பாலாஜி சுந்தருடன் சேர்ந்து உருப்படாமல் போவதாகவும், சுந்தர், பார்த்தா, ரமேஷுடன் சேர்ந்து வீணாவதாகவும், ரமேஷ், சீனு மற்றும் குமாரால் நாசமாவதாகவும், குமார், பாஸ்கர் மற்றும் செந்திலுடன் சேர்ந்து கூத்தடிப்பதாகவும், பாஸ்கரை, ரவியும் செந்திலும் சேர்ந்து கெடுப்பதாகவும், அருள் மற்றும் பார்த்தா இருவரின் சேர்க்கையே செந்திலின் எதிர்காலத்திற்கு தடையாக இருப்பதாகவும், பார்த்தாவின் பாழ்விற்கு பாலாஜியும், சீனுவுமே காரணம் என்றும் , சீனு, ரவி இருவரும் முருகேசன் சகவாசத்தால் சீரழிவதாகவும், முருகேசனின் அரியர்களுக்கு ‘மொட்ட’ ரவியே காரணம் என்றும், ‘மொட்ட’ ரவியோ மேற்படி அனைவராலும் மொட்டையாக்கப்பட்டவன் என்றும் மேற்கண்ட இவர்களின் குடும்பத்தினரால் கூறப்படும் குற்றசாட்டுகளே அது! ஆயினும் “செயற்கரிய யாவுள நட்பின் என்று ‘டோண்ட் ஒர்ரி முஸ்தபாக்களாக’ வலம் வந்து கொண்டு இருந்தனர். அடுத்து வந்த நாட்களில் தீவிரமாக விளையாட ஆரம்பித்தனர் அனைவரும். (பயிற்சி என்று சொல்ல இயலாது). அதுவரை சொந்தமாக ஒரு பேட்கூட இல்லாத பாஸ்கர் அம்மாவிடம் பேட்டுக்கு பணம் கேட்டான். அம்மா, அப்பாவிடம் சொல்ல, அப்பாவோ அவனது தங்கையின் எதிர்காலம் தொடங்கி, பாஸ்கரின் பிறவா மகனின் எதிர்காலம் வரையிலான பிரச்சனைகளை அலசத் தொடங்கினார். பேட்டை தொடர்ந்து ஷூவிற்கும் அடித்தளமிட நினைத்திருந்த பாஸ்கர் வெறுத்துப் போனான். கேக்கிறத வாங்கித்தர முடியதாவங்க எதுக்கு பெத்துக்கிறீங்க? என்று முனக, அடி செருப்பால! வாய தச்சுருவேன். பணக்கார பசங்களோட சேர்ந்து மரியாதை தெரியாத தறுதலையா ஆகிட்டு இருக்கான். சொல்லிவை! என்று அம்மாவிடம் எகிறினார் அப்பா. செந்திலின் தீவிர விளையாட்டைக் கண்ட அவனது மாமா அக்காவிடம், அவன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? சொன்னாலும் காதுல போட்டுக்கிறது இல்ல. உங்க அப்பாகிட்ட சொல்லி வை. நாளைக்கு நான் கவனிக்காம விட்டுட்டேன் அப்படின்னு கம்ப்ளைண்ட் வந்தா கடுப்பாகிடுவேன் என்றார். அருளின் வெல் எஜுக்கேடட் அம்மாவோ, இப்படி லோ லெவல் பசங்களோட சுத்திகிட்டு இருந்தா உன் வாழ்க்கையும் லோவாகிடும் என்று எச்சரித்தார். விளையாடுவதே பிரச்சனையாக, பந்தயப் பணம், உபகரணங்கள் இவற்றுக்கு வீட்டில் பணம் கேட்க இயலாத நிலை உருவானது. அருள், ‘மொட்ட’ரவி, பாலாஜி மூவரும் சேர்ந்து கூடுதலாகவும் மற்ற அனைவரும் அவரவர்க்கு இயன்ற அளவும் பணம் திரட்டவும் முடிவு செய்தனர். அதில் வரும் தொகையை வைத்து போக்குவரத்து செலவையும் பந்தயப்பணத்தையும் முடிவு செய்யலாம். உபகரணங்களை வெளி நண்பர்களிடம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ராயபுர டீமை சந்திக்க நாள் குறிக்கப்பட்டது. சீனுவும்,சுந்தரும் சென்று அந்த குழுவினரோடு பேச வேண்டும் என்று முடிவு செய்தனர். சீனு சுந்தரிடம்,உன் க்ளாஸ்மேட், அவன் கசின் இரண்டு பேரோடவும் போய் நீயே பேசிட்டு வந்துடு. நீதான் கரக்ட்டா பேசுவ மச்சான் என்றான். நீ வாடா, நா மட்டும் தனியா போனா சரியா வராது என்றான் சுந்தர். அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.வேணுன்னா உன் க்ளாஸ்மேட் அவன் பேரென்ன ‘வெற்றி’ அவனையும் டீம்ல இருக்கான்னு சொல்லு.சேர்த்துக்கலாம்!எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு என்று போய் விட்டான். சிறிது யோசித்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெற்றியின் வீட்டுக்கு சென்றான். வெற்றி நீ என்ன செய்ற? உன் கசினோட போய் அந்த டீமை மீட் பண்ற. இந்த மாதிரி நம்ம டீம் இண்ட்ரஸ்டா இருக்காப்ல அப்படின்னு சொல்லி ஒரு சண்டேயா பார்த்து முடிவு பண்ணிரு.சரியா? என்றான். டென்ஷனான வெற்றி, டேய்! கேணத்தனமா பேசாதே. ஒரு விவரமும் தெரியாம நா எப்படி? நீயும் வா என்றான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் சொல்றத அப்படியே சொல்லிரு.உன் கசின் அவனையும் டீம்ல சேர்த்துக்கலாம். நோ ப்ராப்ளம் ப்ளீஸ்ரா!என்ற சுந்தர் பந்தய பணத்தை இரண்டு நாளில் தெரிவிப்பதாகவும் கூறினான். அடுத்து வந்த நாள்களில் வெற்றியை வைத்தே எல்லாம் பேசி முடிக்கப்பட்டது. இதற்கிடையே பாஸ்கர், பார்த்தசாரதி, ரவி, ‘மொட்ட’ ரவி நால்வரும் பேட் மற்றும் ஷூவுக்கு அலைந்து திரிந்தார்கள். அருள் தன்னிடமுள்ள இன்னொரு ஷூவை பார்த்தாவிற்கு தருவதாகக் கூறினான்.மொட்ட ரவி அலுவலகத்தில் தேற்றிக் கொண்டான். பாஸ்கர் அவன் காம்பவுண்டிற்கு எதிர் வீட்டிலிருக்கும் வசதியான அருணிடம் பேசிப் பார்த்தான். சிறிது யோசனைக்கு பிறகு, டேய் எங்கப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட்! என்னோடது காஸ்ட்லி ஷூ. அதனால நீட்டா திருப்பி தரணும் ஓகே! மேட்ச் அன்னைக்கு வந்து வாங்கிக்க. பாஸ்கர் நிம்மதியாக சென்றான். போட்டிக்கு முதல்நாள் பக்கத்து மைதானத்தில் கூடி பேசினார்கள். பேட் ஒன்றும் பிரச்சனையில்லை. அஞ்சு இருக்கு. க்ளவுஸ் மூணு. மேனேஜ் பண்ணிக்கலாம். தண்ணி, ஃபுரூட்டியெல்லாம் அவங்கவங்க கொண்டு வந்துருவோம் என்று முடிவு செய்து கொண்டார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஒயிட் டிரெஸ்ஸா போட்டுக்குவோம். யூனிஃபார்ம் மாதிரி இருக்கும். நம்மள பார்க்கும் போதே மிரளனும். எப்படியாவது ஜெயிச்சிரணும்டா! பணம் கைக்கு வந்ததும் பார்ட்டிதான்! உற்சாகத்துடன் சொன்னான் சீனு. பேட்டிங் பௌலிங் கூட ஓகே. ஃபீல்டிங்தான்டா கொஞ்சம் பார்க்கணும் என்றான் பார்த்தா! அதெல்லாம் பார்த்துக்கெல்லாம் என்ற சீனு சுந்தரிடம், மச்சி! எல்லாம் க்ரெக்ட்டா பேசிட்டேல்ல என்று கேட்க, மையமாக தலையாட்டி வைத்தான் சுந்தர். வெற்றி சரியாக செய்திருப்பான் என்ற நம்பிக்கையில். காலையில் எல்லோரும் எங்க வீட்டு வாசலுக்கு வந்துவிடுங்கள் அங்கிருந்து போகலாம் என்றான் ரமேஷ். இல்லடா, நானும் வெற்றியும் கொஞ்சம் சீக்கிரம் போய்விடுகிறோம். அவங்கள பார்த்து எதுனாலும் பேசி க்ளியர் பண்ணி வச்சிடறோம் என்றான் சுந்தர். அவனுக்கு உள்ளூற ஒரு படபடப்பு இருந்தது. ஓகே கைஸ்! ஆல் த பெஸ்ட் என்று கேப்டனுக்குரிய ஸ்டைலுடன் கை குலுக்கினான் சீனு. மறுநாள் காலை எல்லோரும் ஒன்று சேர்ந்து கிளம்ப வேண்டிய நேரத்தை முடிவு செய்து பெருமிதம், படபடப்பு, பயம் என்று கலவையான உணர்வுடன் கலைந்து சென்றனர். (போட்டி தொடரும்)

கருத்துகள் இல்லை: