வியாழன், 7 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரே

எல்லோரும் அறிந்த விஷயம் என்றாலும், எழுத வேண்டும் என்ற உந்துதலில் எழுதியுள்ளேன்!



யார் அண்ணா ஹசாரே?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.



லோக்பால் பில்

லோக்பால் பில் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.



திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.

1.பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
2.விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
3.நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
4.சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
5.ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல், பொது நலனுக்கு ஊறு விளைவித்தல்.
“லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

கர்நாடகம்,மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,பஞ்சாப்,அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை. மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது.



ஜன் லோக்பால் பில்

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) பிரஷாந்த் பூஷன் (உச்ச நீதிமன்ற வக்கீல்) அரவிந்த் கேஜ்ரிவால் (RTI activist) அடங்கிய குழுவால் பரிந்துரைக்கபட்ட இந்த ஜன் லோக்பால் வரைவில்,

1.“லோக்பால்” மத்தியிலும், “லோக்ஆயுக்தா’ அனைத்து மாநிலங்களிலும் செயல்பட வேண்டும்.

2.அரசு மற்றும் அமைச்சர்களின் குறிக்கீடுகள் இன்றி உச்ச நீதிமன்றம் (அல்லது) தேர்தல் ஆனையம் போன்று தனித்த அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.

3.ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை, நிரூபணங்கள் எல்லாம் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புதல் வேண்டும்.

4. விசாரணையின் போது குற்றவாளியால். அரசுக்கு ஏற்படும் செலவுகளை குற்றவாளியிடமிருந்தே (குற்றம் நிரூபணம் ஆனதும்) பெறப்பட வேண்டும்.

5.பொது மக்களுக்கு: அரசு அலுவலகத்தில் பொது மனிதருக்கு செய்ய வேண்டிய பணி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படாவிடில், குறிப்பிட்ட அதிகாரிக்கு அபராதம் போடப்பட்டு, அந்த தொகை அந்த குறிப்பிட்ட மனிதருக்கு உரியதாகும்.

6.ஆகவே, பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடங்கி, ரேஷன் கார்டு உட்பட அனைத்து அரசு வேலைகள் குறித்த காலத்திற்குள் முடிக்கபடா,விடில் இங்கு புகார் செய்தால் ஒரு மாத கால அவகாசத்தில் நடவடிக்கை முடிக்கப்படும். இது தொடர்பான ஊழல் புகார்களையும் பதிவு செய்யலாம். இதுபோலவே பொதுவிஷயங்களும். இரண்டாண்டுகாலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டுவிடும்.

7.முக்கியமானது. இதன் குழு உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப் படமாட்டார்கள். இந்த அதிகாரம் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் திட்ட அதிகாரிகள் ஆகியோரை சார்ந்தது. ஆகவே அனைத்து வேலைகளும் வெளிப்படையானவை.

8.இந்த லோக்பால் குழு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டால் அந்த விசாரணையும் வெளிப்படையானது. குற்றம்சாட்டபட்டவர் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்குள் நீக்கப்பெற்று தண்டனை பெறுவார்.

9.ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ எல்லாம் இந்த லோக்பாலுடன் இணைக்கப்படும்.

10.இது சம்பந்தமான பொதுமக்களின் பாதுகாப்பு பொறுப்பை லோக்பாலே ஏற்றுக்கொள்ளும்.

கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நமக்கு நன்றாக இருந்தால், அரசுக்கு நன்றாக இருக்காது என்ற விதிப்படி அரசு இழுக்கிறது.

இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று இந்தியன் தாத்தா அப்பாயின்மென்ட் கேக்க, ஏப்ரல் 13 வரை பிஸி, பிறகு பார்க்கலாம் என்று பிரதமர் தாத்தா ஆணவத்தோடு சொல்ல உண்ணாவிரதத்தில் இறங்கிவிட்டார் அண்ணா ஹசாரே.

உஷாராக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேடையில் ஏறாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

வணங்குகிறேன் அவரை.

.

2 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

அன்னா ஹசாரே அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்...

//உஷாராக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேடையில் ஏறாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

வணங்குகிறேன் அவரை.//

உங்களுடன் இணைந்து அவரை வணங்குகிறோம்...

rama kannan சொன்னது…

நன்றி திரு.கோபி