வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சரியா? தவறா?

திரு. இம்ரான்கான் என்பவர் வெளியிட்ட பதிவு இது. அப்படியே வெளியிட்டு உள்ளேன்.முடிவில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளேன். கருத்துக்களை வரவேற்கிறேன்.

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!




நல்லவர்களை, நேர்மையாளர்ளை மதிக்கும் பண்பு எப்போது வரும் இந்த மக்களுக்கு!
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது. சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்… டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.
ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.

அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.
அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).
பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்…

-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.

அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.

அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!

திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?


எனது கருத்து.

நேர்மை என்பது தன்னை சார்ந்த மனிதர்கள் மீதான குறைந்தபட்ச அக்கறை கூட கூடாது என்பதா? பின் தங்கிய ஊர்களில் பிறந்து பெரிய அளவில் வந்தால் ஒன்று தான்/தன் குடும்பம் என்ற அளவில் மட்டும் வாழ்வது அல்லது நேர்மை என்று அடிப்படை வசதிகள் பெற்று தரக்கூட உதவாமல் இருப்பது ஏன்? அரசியல் சார்பற்று சமூக அக்கறையுடன் செய்யலாமே? சமூகம் என்பது அந்த மக்களையும் உள்ளடக்கியது தானே?

திரு. அப்துல்கலாம் அவர்களின் நேர்மை மற்றும் நற்பண்புகள் அனைவரும் அறிந்ததே.
அவர் மிகச்சிறந்த மனிதர். முதல் குடிமகன் என்பது 5 வருட காலம் மட்டுமே. ஆனால் அறிவியலாளர்,பேராசிரியர் மற்றும் இளையதலைமுறைக்கு முன் மாதிரியான அவரது வீடும், சுற்றுப்புறமும் இவ்வாறு இருப்பது சுகாதார விழிப்புணர்வு குறைவாக இருக்கும் நம் நாட்டிற்கு நல்லதல்ல. அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வும், பொறுப்பும் ஏற்படுத்த வேண்டிய கடமை கலாம் என்ற தனிப்பட்ட மனிதருக்கு உண்டுதானே?

3 கருத்துகள்:

Solai Kannan சொன்னது…

இந்த பதிவிலும், புத்தருடனான நேர்காணலிலும், கருத்துக்கள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை, அது கருத்து சுதந்திரம். ஆனால், இரண்டிலும் தனிப்பட்ட மனிதர்களை சுட்டிக்காட்டி இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

rama kannan சொன்னது…

கருத்துக்கு நன்றி அண்ணா.
ஆனால் இவர்கள் இருவருமே தனிப்பட்ட மனிதர்கள் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் இவர்கள் மீதும், இவர்களின் கருத்துக்கள் மீதும் மிக்க மரியாதை உண்டு. இவர்களை விமர்சித்தே ஆக வேண்டும் என்பதல்ல என் நோக்கம். அதே சமயம் சாதாரண மக்களைக்காட்டிலும் இவர்களது பேச்சும், வாழ்க்கை முறையும் இந்த சமுதாயத்தால் அதிகம் கவனிக்கப்படுகிறது. அதனால் பாதிப்பும் அதிகமாகும்.

என்னளவில் நன்மை,தீமை இரண்டிற்கும் மனிதர்களாக பிறந்த அனைவரும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) சமுதாய மாற்றங்களுக்கான காரணிகளே! இதில் அளவுகள் மாறுபடலாம்.

இந்தியாவின் இதயங்கள் கிராமங்களில் இருப்பது உண்மையானால் அந்த இதயங்களின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்ற ஆதங்கமும்,அதற்கு இந்த நல்இதயங்களால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் இதை எழுதத்தூண்டியது.

Solai Kannan சொன்னது…

அருமையாக இருந்தது விளக்கங்கள், ரமா. ஆதங்கமும் அக்கரையும் இருக்கக்கண்டு தான் அந்த பதிவுகள் பிரசவித்தது. அது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், அந்த உங்களுடைய கருத்துக்கள் படிப்பவர்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்ற அக்கரையில் தான் நான் எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இது டிஜிடல் உலகம், இன்று பதிவு செய்யப்பட்டது காலம் காலமாக இருக்க போகிறது. எந்த ஒரு தனிநபரைப்பற்றியும் நாம் நல்லதாக எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், அவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு முன்பு அவர்களுக்கு அவர்கள் பக்கத்து நியாயங்களை எடுத்துச்சொல்ல சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, உங்களுடைய ஆதங்கங்களை முன்னால் குடியரசு தலைவருக்கு எழுதிப்போட்டு அவரிடம் இருந்து விளக்கம் பெற்று, இரண்டையும் பதிவு செய்திருந்தால் அவர் பக்கத்து நியாயம் என்ன என்பது தெரிந்திருக்கும்.

அதே நேரம், புத்தரைப்பற்றிய ஒரு சிறிய பாடலில் தான் அவர் வரலாறு இருக்கிறது. நேற்று நடந்து வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் செய்திகள் ஒவ்வொரு சேனலிலும் முன்னுக்கு பின்னாக முரண்பாடாக வரும் பொழுது, பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு பாடலில் எழுதிய வரலாறு, புத்தரின் மொத்த கருத்துக்களை பிரதிபலித்திருக்க வாய்ப்பில்லை. அதை மட்டும் வைத்துக்கொண்டு அவரையோ அல்லது வேறு யாரையோ விமர்சிப்பது, உண்மை எது என்று தெரியாமல் திசை திருப்புவது போல் ஆகிவிடலாம்.

நீங்கள் சொன்ன கருத்துக்களையே, இன்னார் என்று குறிப்பிடாமல், ஒரு பொதுவான கருத்தாக சொல்லலாம், அப்படி சொல்லி சில celebrity கள் கூட தங்களின் சுற்றத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அக்கரையில்லாமல் பிரபலமாவதை மட்டுமே கருத்தாக கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதே மாதிரி பல மதங்களை ஸ்தாபித்தவர்கள் கூட தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவர்கள் இல்லை என்று உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

எல்லா செயல்பாடுகளும், சரி தவறு என்ற இரண்டு பக்கங்களை கொண்ட coin தான், அதனால், எல்லா celebrityகளின் செயல்பாடுகளும் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், அவர்கள் அந்த செயல்களை செய்ததற்கோ அல்லது செய்யாமல் இருந்ததற்கோ அவர்களுக்கு என்று ஒரு நியாயமும் விளக்கமும் இருந்திருக்க வேண்டும். அப்படி அவர்களின் விளக்கங்கள் பெறப்படாமல் விமர்சிப்பதால் நம்முடைய சொல்ல வந்த கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு விமர்சனம் மட்டுமே நிற்கும் என்பதால் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன்.