வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

புத்தருடன் ஒரு நேர்காணல்!

சமீபத்தில் ஒரு புத்தர் கோவிலுக்கு சென்ற போது தோன்றிய கேள்விகள்.

நான்: வணக்கம். நலமா ?

புத்தர் : புன்னகைத்தார்.(சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை போலும்.)

நான்: நீர் சத்தியம் தவறாதவர் என்கிறார்களே! யசோதையை
மணம்செய்யும் போது பிரியாமல் இருப்பேன் என்று சத்தியம்
செய்திருப்பீர் அல்லவா? பின் நள்ளிரவில் அவரை நீங்கிய நீர் சத்தியம் தவறியவர்தானே?

புத்தர்: புன்னகைத்தார். ( யாராகினும் எல்லா நேரங்களிலும்
சத்தியத்தைக் கடைப்பிடிப்பது சிரமம் என்கிறாரோ?)

நான்: மேலும் மனைவியின் கருத்தைக் கூடக் கேட்காததன் காரணம்?நான்
என்ற எண்ணமா? அல்லது ஆண் என்ற எண்ணமா?

புத்தர்: புன்னகை. (இரண்டும் போலும்.)

நான்: சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே! என்ற கூற்றின்படியும்
தாங்கள் கடமை தவறியவர்தானே?

புத்தர்: புன்னகை. (நான் இல்லையென்றாலும் என் மகனை அவன் தாய் சான்றோன் ஆக்கியிருப்பாள் என்கிறாரோ? போகட்டும்.)

நான் : தனக்காக மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்காகவும் போராடுகிற சாமான்யனைக் காட்டிலும் தாங்கள் மரத்தடியில் அமர்ந்துப் பெற்ற
ஞானம் எந்த வகையில் உயர்ந்தது?

புத்தர்: புன்னகை. (இது எளிது என்கிறாரோ?)

நான்: கடைசியாக ஒரு கேள்வி?
உலகில் எல்லா மதங்களும் அன்பையே வலியுறுத்துகிறது.
இருந்தபோதிலும், ஆதிகாலந்தொட்டே, இவ்வுலகில் மதச்சண்டையும்,
இனச்சண்டையும் இருந்துவருகிறபோது, புதிதாக ஒரு மதத்தை
தோற்றுவிப்பதால் , ஒரு புதிய சண்டை உருவாகக்கூடிய வாய்ப்பு
உள்ளது என்று முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய தாங்கள்
ஒரு முறையாவது சிந்தித்ததுண்டா?

புத்தர் இப்போது புன்னகைக்கவில்லை. அழுகிறாரோ? குற்றவுணர்வாக
இருக்கும்.

புத்தம் சரணம் கச்சாமி!

விடைபெற்றேன்.

2 கருத்துகள்:

RAGUNATHAN சொன்னது…

கடைசி கேள்வி பதில் அருமை. வாழ்த்துகள். நல்ல பதிவு.

rama kannan சொன்னது…

thank u ragunathan