வெள்ளி, 27 மே, 2011

சமச்சீர் கல்வி என்னும் மாயை

சமச்சீர் கல்வி கடந்த பத்து நாட்களாக எல்லோரிடமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் என் பங்கிற்கு நானும். எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற இரு நிலைப்பாடுகளையே பார்ப்பதனால் எழுதத் தோன்றியது.

முதலாவது திமுக அரசு ஆட்சிமுடியும் தருவாயில் அவசரமாக காசு பார்க்க நினைத்ததன் விளைவுதான் இந்த திட்டம்.தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும், எந்த திட்டமானாலும், அதில் காசு, கமிஷன், லஞ்சம், வேண்டியவர்களுக்கு ஆர்டர், மறைமுகப் பலன் இவையெல்லாம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.கழக கண்மணிகள் இந்த ஏப்ரல், மே மாதங்களில் அச்சகங்களை ஆரம்பித்து பின் மூடிவிடுவர். ஆசிரியர்கள் குழு அமைத்தலில் தொடங்கி புத்தகங்களை அச்சடிக்க ஆர்டர்கள் கொடுப்பதில், அச்சிட்ட புத்தகங்களை விநியோகிக்க, விற்க என எல்லா நிலையிலும் காசு பார்த்துவிடுவர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஊழல் அவர்களிடையே (அதிமுக,திமுக) பிரசித்திப் பெற்றது.அதேபோல் ஒருகழகத்தால் ஆரம்பிக்கப்படும் திட்டத்தை இன்னொரு கழகம் அப்படியே செயல்படுத்த இயலாது. பின் அடுத்த தேர்தலுக்கு எதை சொல்லி ஓட்டு கேட்பதாம்?
இதில் கலைஞர் குடும்பசரிதப் புகழ், கண்களை உறுத்தும் எழுத்துப்பிழைகள் வேறு. தவறான ஒன்றை கொடுப்பதற்கு பதில் கொடுக்காமலே இருந்து விடலாம்.
ராஜசேகர ரெட்டி தொடங்கிய விவசாயிகளின் காப்பீடு திட்டம் தான் தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுதிட்டம். ஆனால் ரா.ரெட்டி அவர் பெயரை அந்த திட்டத்திற்கு சூட்டவில்லை. கருணாநிதி எந்த திட்டத்தையும் மக்கள் நலனுக்காக மண்டையை உடைத்து கண்டுபிடிக்கவில்லை. ஓட்டுக்காக அவர் ஆரம்பிப்பார், நோட்டுக்காக குடும்பத்தினர் செயலாக்குவார்கள். கழகங்களின் ஊழல்களும் அநாகரீக அரசியலும் எழுதி முடிக்க முடியா காவியங்கள்.

நாம் விஷயத்திற்கு வருவோம்.

முதலில் மெட்ரிக்குலேஷன் எனும் படிப்பு முறையை ஒரு பாடத்திட்டமாக மாற்றிய புண்ணியவான்கள் யாரோ தெரியாது!12 வருட பள்ளி படிப்பு (அதாவது 5 வயது முதல் 16 வயது வரை) படித்தப் பின்னரே கல்லூரி படிப்புக்கு தகுதியானவர்கள் என்று அளிக்கப்படும் சான்றிதழ்தான் மெட்ரிக்குலேட். இது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். நமது நாட்டில் பத்து வருட பள்ளிபடிப்பு (6 வயது முதல் 15வரையிலான) முடிந்தவுடன், பியூசி (pre University degree) இரண்டு வருடம் படித்த பிறகே இளங்கலை படிப்புக்கு தகுதி பெறுவர். அதாவது மேற்கத்திய நாடுகளில் 12+3(4or5).
இந்தியாவில் 10+2+3(4 or 5) (இந்த 4,5 என்பது பொறியியல் &மருத்துவம்) பின்னர் பியூசி +1,+2 என்று மாற்றம் செய்யப்பட்டு பள்ளிகளிலேயே படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. உண்மையில்
மற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் பொதுவான அதாவது (நேஷனல்) தேசிய பாடத்திட்டம் என்று மட்டுமே இருக்கும். உலக அளவில் நம்முடையது இந்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ). நம்மளவில் மத்திய பாடத்திட்டம், மாநில பாடத்திட்டம் என்றுதான் உள்ளது. காரணம் மற்ற நாடுகளில் இல்லாத பண்மொழி கலாச்சாரம்.

சிபிஎஸ்இ (மத்திய கல்வி) மற்றும் எஸ்பிஇ (மாநிலக்கல்வி) இரண்டையும் கலந்த ஒரு ஜல்லியடி பாடத்திட்டம்தான் மெட்ரிக்குலேஷன் என்பது. மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டங்கள் உயர்ந்தது என்ற மாயையை உருவாக்கி காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே. தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி தரத்தின் பிரச்சனை பாடங்களில் அல்ல. படிப்பிக்கும் முறைகளில்தான். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் புவியியல் இவற்றின் பாடத்திட்டங்கள் சமமாகத்தான் இருக்கின்றன. படிக்கும் முறையிலும் எழுதும் முறையிலும்தான் வித்தியாசப்படுகின்றன. மெட்ரிக்குலேஷனைப் பொறுத்தவரையில் பாடங்களில் எழுதும் தன்மை அதிகம். ஒரு பாடம் நடத்தப்பட்டால் கேள்வி பதில்களை க்ளாஸ் வொர்க் எனப்படும் பள்ளி நோட்டில் ஒரு முறையும், வீட்டுப்பாட நோட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுத வேண்டும். அதைத் தவிர வொர்க்புக் எனும் பயிற்சி புத்தகம். ஒரு ஆங்கில இலக்கணத்திற்கு மூன்று புத்தகங்கள் வெவ்வேறு பெயர்களில். இங்கு அறிவியல் லேப்கள், கம்ப்யூட்டர் லேப்கள் இருக்கிற மாதிரி, ஆனா இருக்காது. எனக்கு தெரிந்து மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலங்கள் கிடையாது. அல்லது நூலகம் என்ற பெயரில் பள்ளிகளில் இரண்டு அலமாரிகளில் சிறுவர் புத்தங்கள் அடுக்கிவைக்கப்பட்டு, குழந்தைகள் கண்களில் படாத வண்ணம் பராமரிப்பார்கள். அரசுப் பள்ளிகளிலாவது விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நேரம் ஒதுக்குவார்கள். இந்த தனியார் பள்ளிகளில் அதுவும் கிடையாது இடமிருந்தால்தானே அதைப் பற்றி யோசிக்க? ஆனால் லைப்ரெரி,லேப் மற்றும் ஸ்போர்ட்ஸ் மெயின்டனன்ஸ் ஃபீஸ் கண்டிப்பாக உண்டு.லைப்ரெரி,லேப் ஃபீஸ் வாங்குகிறீர்களே, அவற்றை குழந்தைகள் கண்ணில் கூட காட்டமாட்டேன் என்கிறீர்களே என்று எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. ஏனெனில் நமது எண்ணமெல்லாம் அர்ஜுனன் காண்டிபக்குறியாக தொண்ணூற்றி ஐந்து சதவிகித மார்க்கை நோக்கி நிலைகொண்டு விட்டதே! அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியப் பெருந்தகைகளைக் காட்டிலும் கைடு, நோட்ஸ் என்று அழைக்கப்படும் சாதனங்களின் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருப்பார்கள். மெட்ரிக்குலேஷனில் அந்தத் தொல்லை இல்லை. ஏனெனில் பள்ளிகளே அந்த நோட்ஸ்களை வாங்கி வைத்துவிடும் ஆசிரியர்கள் அந்த நோட்ஸை போர்டில் எழுதிப் போட்டு விடுவார்கள். இரண்டிலும் மாணவர்களின் புரிதல்கள் பிரச்சனை இல்லை. அவரவர் மனப்பாடத்திறனுக்கு ஏற்றபடி தேர்வுத் தாளில் கக்க வேண்டும்.


மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ எதுவாக இருந்தாலும், நல்ல முறையில் கற்பிக்கும் பள்ளிகளில் (இவைகளின் கட்டணம் மிக அதிகம்). வீட்டுப் பாடங்கள் என்பது படிப்பதும் அது சம்பந்தமான செயல்தயாரிப்புகளும்தான். உதாரணமாக மேல்தகவல்கள் சேகரிப்பு, சார்ட் தயாரிப்பது, படங்கள் வரைவது, அடுத்தநாள் பள்ளியில் அதைப்பற்றி விவாதிப்பது என்று இருக்கும். சோதனை செய்முறைகளை செயல்வடிவில் காண்பிப்பார்கள். கம்ப்யூட்டர், லைப்ரெரி, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் செயல்படுத்துவார்கள். ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அப்டேட் செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு மருத்துவ சோதனைகளும் செய்யப்படும். இதுபோல் நடத்தும் போது செலவு அதிகம் என்பது அவர்களது வாதம்.

இது மாணவர்களை ஒப்பீட்டு பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல பள்ளியில் (நல்ல என்பது படிப்பிக்கும் முறையில்) ஸ்டேட்போர்டில் படிக்கும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவுத் திறன் மோசமாக நடத்தப்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவனின் அறிவுத்திறனை விட நன்றாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளும், மோசமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் தரத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எழுத்து பிழையின்றி எழுத (தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்) இவர்களுக்கு இயலாது.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சிறப்பாக செயல் படுத்தப்படும் பள்ளிகளும் உண்டு. மெட்ரிக்குலேஷனில் தகுதியற்ற ஆசிரியர்களால் மோசமாக நடத்தப்படும் பள்ளிகளும் உண்டு. பெரும்பாலும் நகர் புறங்களில் சில புகழ் பெற்ற நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக காசு வாங்கிக் கொண்டாலும் சிபிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு இரண்டு பாடத்திட்டங்களையும் கொண்டு தரமாகவே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பணத்தை வாங்கிக் கொண்டு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துக் கொண்டு குறைந்த முதல் அதிக லாபம் என்று நூறு சதவீதம் லாப நோக்கோடு செயல்படுகின்றன.

சராசரியாக 15லிருந்து 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுமே நல்ல கல்விக்கு அடிப்படை. இங்கு ஒராசியர் பள்ளிகள், இருஆசிரியர் பள்ளிகள், ஆசிரியர் எப்போதாவது வந்துபோகும் பள்ளிகள் என்ற குறைகளே இன்னமும் களையப்படவில்லை.

நம் ஊரில் நிலவும் சில மாயைகள்

வெ‌ளிநாடுக‌ளி‌ல் பள்ளியிலிருந்தே விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கமுடியும்.

அங்கு தேர்வுமுறைகள் கிடையாது அல்லது எளிதானது.

ரேங்க் கிடையாது கிரேடுகள் தான்.

பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக விருப்பப்பட்ட கல்லூரிக்கு சென்று விடலாம் .

நான் கூட எனது இளமை பருவத்தில் அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் பிறக்காமல் இந்த பாவப்பட்ட ஊரில் பிறக்க நேர்ந்த கதிகேட்டை நினைந்து நொந்ததுண்டு!

உண்மையில் முதலாளித்துவ பிரிட்டன் அமெரிக்கா தொடங்கி கம்யூனிச பூமியான சீனா வரை
12 வருட வகுப்பு பள்ளிப்பாடத்தில் மொழிபாடம் தொடங்கி அறிவியல், கணிதம், சமூக அறிவியல், கலை, சிட்டிசன் சிப் எனப்படும் அடிப்படை மக்கள் உரிமைப்பாடம் வரை கட்டாயம் படிக்கவேண்டும்.
தேர்வு என்பது மூன்று அல்லது இரண்டு வருடாந்திர(டெர்ம்) தேர்வுகள் உண்டு. ஆனால் வார உள் தேர்வு (இன்டர்னல்) எழுத்துதிறன், வாசிப்பு பேச்சுதிறன், பகுத்து ஆராயும் திறன் (அனலெடிக்கல்), சிறிய ப்ராஜெக்ட்டுகள் அடிப்படையாக கொண்டு இவற்றுடன் எழுத்து தேர்வும் சேர்த்து மதிப்பெண்கள் அளிக்கப்படும். 60+40(100%)

ரேங்க் வரிசை கிடையாது. ஆனால் ABCD என்று கிரேடுகள் உண்டு. இதுவும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கொடுக்கப்படும். A (90-100), B (80-89), C (70-79)இதில் சில மாறுபாடுகள் இருந்தாலும் இதுதான் அடிப்படை. ஆனால் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க்குகள் மாறும். சில நாடுகளில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க் 45/100.

நமது நாட்டில் போன்று மருத்துவம் பொறியியல் மட்டுமன்றி மற்றவகை படிப்புகளுக்கும் அந்தந்த பல்கலைகழகங்களால் நடத்தப்படும் நுழைவு தேர்வை எழுதியே குறிப்பிட்ட பாடபிரிவில் சேர இயலும்.

அனைத்து நாடுகளிலும் (சீனா உட்பட) பள்ளிகள் தனியார் வசம் உண்டு. பள்ளி தொடங்க அங்கு வங்கி கடன்களும் உண்டு. ஆனால் அனுமதி பெறுவதில் சட்டங்கள் கண்டிப்பாகவும் முறையாகவும் இருக்கும். பள்ளிகளின் நிர்வாகக்குழு என்பது நம்மூர் மாதிரி மாமன் மச்சான் சகலைபாடி சபையாக இருக்காது. ஆசிரிய பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதி, பெற்றோர்சங்க நபர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ஆட்சிமன்ற நபர் அடங்கிய குழுதான் நிர்வாகம் செய்யும். கட்டணம் அரசின் வரைமுறைக்கு உட்பட்டுதான் தீர்மானமாகும். கட்டண உயர்வும் பள்ளிகளின் விண்ணப்பத்தில் உள்ள காரணங்கள், பள்ளிகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், இவற்றின் மீதான கல்விஅமைச்சக ஆய்வு இவற்றிற்கு பிறகே முடிவு செய்யப்படும்.

வோட்டுப் பொறுக்கும் அரசியல்,
பதவி,புகழ், பொருள் இதற்காக எதையும், யாரையும் விலையாக கொடுக்க தயங்காத மக்கள்
அடுத்தவனைவிட பத்து ரூபாய் கூடுதலாக சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று வழிகாட்டும் பெற்றோர்
என்ற இந்த சுயநலமிக்க சமுதாயத்தில்

தேய்ந்த துடைப்பத்துக்கு குஞ்சம் பட்டிலிருந்தால் என்ன? சணலில் இருந்தால் என்ன?

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஔவையார்

(நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன,மேடாக இருந்தால் என்ன, எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய்!)

செவ்வாய், 17 மே, 2011

தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி பலரும் பல விஷயங்களை சொல்லும் நிலையில், எனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.



தமிழ்நாடு: தமிழக முடிவுகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த முடிவுதான். இது ஜெயலலிதாவின் வெற்றி என்று சொல்ல இயலாது. ஒரு பொறுப்பான எதிர் கட்சியாக செயல்படாது தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்தித்துள்ளார். அவ்வப்போது அவர் சார்பாக சில அறிக்கைகள் வெளிவருவதுடன் சரி. வேறு சரியான மாற்றுகள் இல்லாததாலும், ஆளும் கட்சி மீதான மக்களின் அதீத வெறுப்பின் காரணமாகவுமே இந்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிர்கட்சி என்ற அந்தஸ்து பறிபோனது இதுவே முதல்முறை. உபயம்: விஜயகாந்த். நல்லவேளை பேரங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. பாமக டாக்டரின் சித்து வேலைகளுக்கு இடமில்லை. “மக்கள் எனக்கு ஒய்வளித்து உள்ளார்கள்”. சமீபத்தில் வந்த கருணாநிதியின் கருத்துக்களிலேயே இதுதான் உண்மையில் மனதின் அடியில் இருந்து வெளிப்பட்ட கருத்து என நினைக்கிறேன். கை மீறி போன குடும்ப உள்ளடிகளால் நொந்துபோன முதியவரின் ஆசுவாசம். குடும்பம் மட்டுமல்லாது நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று அடிமட்டம் வரை பரவியிருந்த எத்தெச்சதிகாரம், நிர்வாக சீர்கேடு, ஊழல் என்று சகிக்கமுடியாத அளவிற்கு போய்விட்டது. அரசின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. சரி செய்ய அவகாசம் வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கூற்று மறுக்க முடியாத ஒன்று. ஆனால் மக்கள், ஊடகங்கள், சொந்தக் கட்சிகாரர்கள் மட்டுமன்றி அமைச்சர்களும், அதிகாரிகளும்கூட நினைத்தவுடன் சந்திக்க இயலாத நிலையும் உடன் பிறவா சகோதரியின் பாசமும் தொடர்ந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

புதுவை: செல்வாக்கும், மக்கள் எளிதில் சந்திக்க கூடியவருமான ரெங்கசாமியை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் தனக்குதானே வைத்துக் கொண்ட ஆப்பு. ஆனால் காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் ஐக்கியமாகி விடுவதை பார்த்திருக்கிறோம்.



கேரளா: LDF ஐந்து வருடம் UDF ஐந்து வருடம் என்பதுதான் கேரளாவின் பதிவு(வழக்கம்) . ஆனால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கம்யூனிஸ்ட்டுகள் சமபலத்துடன் இருப்பது. வெறும் நான்கு ஸீட்களே வித்தியாசம். காரணம் அச்சுதானந்தன். சொந்தக்கட்சி என்று மட்டுமில்லாமல் எதிர்கட்சியிலும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்போதும் முதலமைச்சர் ஆவதற்கு தள்ளுமுள்ளுகள் நடைபெறும். முதலமைச்சர் வேட்பாளராக உம்மன்சாண்டி அறிவிக்கப்பட்டாலும், இந்த முறை வித்தியாசமாக நான் வரலை, நீ வரலை என்பதாக இருக்கிறதாம். ஏனெனில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்பதால்.



மேற்குவங்கம்: அதிர்ச்சி என்று ஊடகங்கள் வருணித்தாலும், கடந்த சில வருடங்களாகவே உள்ளாட்சி தேர்தல் தொடங்கி இடைத்தேர்தல் வரை சீட்டை மம்தாவிடம் பறிகொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் தோழர்கள்! காரணம் மம்தா தீதியின் அதிரடி அரசியல் மட்டுமல்ல.


1977ல் ஜோதிபாசு தலமையில் மார்க்ஸிஸ்ட் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு எந்த மாநிலமும் செய்யாத நிலசீர்திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் ஏழை விவாசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது. விவசாயம் முக்கிய தொழில். நிலங்கள் சிறிய அளவில் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி தனிமனித தேவைகளை நிறைவு செய்தாலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி பெருகவில்லை. 1948தொடங்கி 1962 வரையிலான சித்தரஞ்சன் தானியங்கி இன்ஜின் தொழிற்சாலை துர்காபூர் எஃகு தொழிற்சாலை தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகியவை தவிர்த்து ஒரு IT கம்பனியும், ஒரு பெட்ரோகெமிக்கல் கம்பெனி மட்டுமே இந்த 34 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவை.


மாநிலத்தின் செலவு அனைத்தும் அரசினுடையது. ஆனால் அதற்கேற்ற வருமானமில்லை. பொருளாதார ரீதியாக மத்திய அரசை சார்ந்து இருக்கவேண்டிய நிலை மற்றும் அண்டை நாட்டு அகதிகளின் வரவு என்ற பிரச்சனை வேறு.

அரசாங்கத்தை நிர்வகிக்க தொழில் வளர்ச்சி அவசியம் என்று கணக்கிட்டு சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தபோது அரசாங்கத்திடம் துண்டு நிலம்கூட இல்லை. அதையெல்லாம்தான் கொடுத்தாயிற்றே. ஆனால் நிலங்களை திரும்ப எடுப்பதில் சிக்கல். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் அரசு சரியான திட்டமும், வழியும் ஏற்படுத்தாமல் அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை.

மற்றபடி இந்த 34 ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றசாட்டு கிடையாது. இந்தியாவின் எந்த பகுதியில் மத கலவரம் ஏற்பட்டாலும் மிகவும் சென்சிடிவான (அருகில் பங்களாதேஷ்) இந்த பகுதியில் ஒரு கலவரமும் ஏற்பட்டது கிடையாது. மேல்மட்டத்திலும் அதற்கு அடுத்த அளவிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் நேர்மையானவர்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர்கள். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், பஞ்சாயத்து நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் இங்குள்ள வங்காளிகளின் கருத்து.

இதுவரை மம்தா பாணர்ஜி எந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி வென்றாரோ, அதே பிரச்சனைகளை அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இரயில்வே நிர்வாகத்தை சரியாக நடத்த இயலாதவர் ஒரு மாநிலத்தை எங்கனம் நிர்வகிப்பார் என்பதை அம்மாநில மக்களே உணர்ந்து சொல்லட்டும்.

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்


உலகமனைத்தையும் உங்க குடைக்குள் ஸாரி, ஒரே குடைக்குள் கொண்டுவர விரும்பும் ஐயா ஒபாமா, வணக்கமுங்க. நல்லா இருக்கீங்களா? இந்த மீடியாக்கள் வேற அநாவசியமா கேள்வி கேட்டு உங்க BPய ஏத்துறாங்கபோல. உடம்ப பாத்துக்கோங்க. உலகமே உங்கள நம்பித்தானே இருக்கு.

உங்கள பாராட்டவும் அதோட ஒரே ஒரு கோரிக்கையையும் வைக்கவும்தான் அனுப்ப இயலாத இந்த கடிதத்தை எழுதுறேன்.

ஒசாமா இறந்துட்டாரு. உங்கள அசுரன வீழ்த்துன கிருஷ்ண பரமாத்மாவா பார்க்கிறாங்க. நல்லது. ரொம்ப சந்தோஷம். எனக்கும் கொள்கைன்ற பேர்ல அப்பாவி மக்கள் கொல்லப்படுறதுல விருப்பம் இல்லைங்க. தீவிரவாத செயல்களால் கொல்லப்படுகிற பொதுமக்களை போன்றே தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கொல்லப்படுகிற பொதுமக்களின் நிலமையும் என்று நினைக்கிறவங்கள்ல நானும் ஒரு ஆள்.

பாகிஸ்தானில் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தமா புகுந்து தாக்குதல் நடத்துறது நியாயமா? உங்க நாட்டுல மத்தவங்க புகுந்து செஞ்சா ஒத்துக்குவீங்களான்னு? சத்தியமா நான் கேக்கலைங்க, சர்தாரி கேக்கிறாரு. எனக்கு புரியுது. ஐயா என்ன சொல்ல வர்றீங்கன்னா, பாக்.தீவிரவாதிகளை ஆதரிக்கிற நாடு அதனால அவங்க கிட்ட சொன்னா மேட்டர் லீக் ஆகி ஆளு எஸ்கேப்பாகிடுவார்ன்னு. அதுவும் சரிதாங்க.

அந்த காலத்துல ஆப்கானிஸ்தான்ல முஜாகைதின்களுக்கு எதிரா PPDAக்கு ஆதரவா சோவியத் தலையிட்டதால, அதை அழிக்க ஒரு ஆடு(ஒசாமா) வளத்தீங்க. வளர்த்த கிடா உங்க மார்பிலேயே பாயவும் ஆட்டை பிரியாணி போட்டுட்டீங்க. ( மக்கள் வரிப்பணத்துல ஒரு காஸ்ட்லி பிரியாணி!) நீங்க ரொம்ப படிச்சவரு. விவரமானவரு. எனக்கு அவ்வளவெல்லாம் விவரம் கிடையாது. உள்ளூரு மேட்டர விட்டுட்டு, ஊரான் வீட்டு பிரச்சனைல ஆதாயம் பாக்கலாம்னு நினைக்கிறவங்க நாட்டு பொருளாதாரத்துக்கெல்லாம் சங்குதான்னு உங்களுக்கு இன்னுமா தெரியாம இருக்குன்னு நான் கேக்க வரலங்க.

ஒசாமா இறந்த பிறகு நீங்க வேர்ல்ட் டிரேட் சென்டர்க்கு சென்று அஞ்சலி செலுத்தியதை பார்த்தபோது, பழிவாங்கிவிட்டு, அப்பா,அம்மா/நண்பன் சமாதியில் நிற்கும் எங்கள் சினிமா ஹீரோ போன்றே இருந்தது. சிலிர்த்துப் போச்சு.

ஆனால் மும்பை தாக்குதல்ல தொடர்புள்ள ‘டேவிட் ஹெட்லே’ உங்க ஊர்லதான் இருக்காரு. எங்காளுங்க கெஞ்சி கேட்டு விசாரண பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அதே போல் எங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோன போபால் அழிவு .( இரட்டை கோபுர தாக்குதல் மாதிரி இல்லை. பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு, கருவிலுள்ள குழந்தைகளையும் விடாது தொடர்கிறது) அதில் சம்பந்தப்பட்டவர் வாரன் ஆன்டர்சன். நீங்க சொல்ற மாதிரி, மற்ற செயல்களைப் போன்றே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும், அவர் பிளான்ட்ட கையால உடைக்கல. அதனால அவர ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு தெனாவட்டா பதில் சொல்றீங்களே, நியாயமா? என்று கேட்குமளவுக்கு எனக்கெல்லாம் விவரமில்லீங்க. மெத்தப் படிச்ச உங்களுக்கு தெரியாததா?“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
ஐயோவென்று போவான்னு” எங்க ஊர்ல ஒருத்தர் சொல்லியிருக்காரு.

பாருங்க, நான் சொல்ல வந்தத விட்டுட்டு என்னன்னவோ எழுதிகிட்டு இருக்கேன். என்னோட கோரிக்கை என்னன்னா

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒசாமா, ஒசாமான்னு சொல்லி ஒரு பிளாக் & ஒயிட் பாஸ்போர்ட் போட்டாவ மட்டுமே காமிக்கிறாங்க. அஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தா சொந்தக்காரனையே அடையாளம் தெரியமாட்டேங்குது. அவரு மட்டும் அப்படியே இருக்காரேன்னு ஒரு ஆச்சரியம். நேத்திக்கு நீங்க வெளியிட்ட ஒசாம போட்டாக்களிலும் முழுசா கம்பளி போர்த்திக்கிட்டு, முக்காவாசி திரும்பி முதுக காமிச்சுகிட்டு டிவி பார்க்கிறார். அது ஒசாமாவா இல்ல அவரோட சித்தப்பாவான்னு சந்தேகமா இருக்கு அதனால அவரு இறந்துபோன ஒரு போட்டவ காமிச்சுட்டீங்கன்னா உலகத்துல அதர்மம் அழிஞ்சு தர்மம் தல தூக்கிடுச்சுன்னு நாங்களும் எங்க புள்ளகுட்டிகளும் நிம்மதியா தூங்குவோம்.
செய்வீங்களா?

திங்கள், 2 மே, 2011


மின்கம்பியில் வந்தமரும்
சிறு பறவையின் உயிர் துடிப்பு
கரைகிறது நகரத்தின் இரைச்சல்களில்
கருங்காற்றின் வெப்பத்திலுருகும்
புவியை விழுங்கத் துடிக்கிறது
......மலைப் பாம்பை போன்று
சுற்றியிருக்கும் கடல்
அழுத்தங்களுக்கிடையே
மூச்சு திணறும் மரமொன்று
உதிர்க்கிறது தன் கடைசி இலையை
ஆம்/இல்லை என்ற
ஒற்றை நம்பிக்கையில்